கோயிலில் கொள்ளை முயற்சி உள்ளிட்ட காஞ்சிபுரம் மாவட்ட க்ரைம் செய்திகள்
கோயிலில் கொள்ளை முயற்சி உள்ளிட்ட காஞ்சிபுரம் மாவட்ட க்ரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளன.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த ஆற்பாக்கம் ஏரிக்கரை அருகே சூதாட்டம் நடைபெறுவதாக மாகரல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட மாகரல் கார்த்திக் (39), குண்டையார்தண்டலம் ஆனந்தன் (30), ஆற்பாக்கம் வெங்கடேசன் (35), முனுசாமி (48), எல்லப்பன் (30) ஆகியோர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து பிளேயிங் கார்ட்ஸ் 104 மற்றும் ரூ.50 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதேபோன்று, சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிள்ளையார்பாளையம் அங்காளம்மன் கோயில் தெரு அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட கிருபாநந்தன் (49) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து பிளேயிங் கார்ட் 1 மற்றும் ரொக்கம் ரூ.130 ம், பிள்ளையார்பாளையம் கன்னிகோயில் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜேந்திரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து பிளேயிங் கார்ட் 2 மற்றும் ரொக்கம் ரூ. 90 ம் கைப்பற்றப்பட்டது.
கோயிலில் கொள்ளை முயற்சி
மேலும் ,காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்டபட்ட பிள்ளையார்பாளையம் கச்சபேஸ்வரர் நகரில் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த 3 பேர் கையும் களவுமாக அகப்பட்டனர்.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் நகரில் உள்ள அண்ணா தெருவில் வரசித்தி பெற்ற விநாயகர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அப்பகுதி மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 சிறுவர்கள் கோயிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து சில்லரை காசுகள் ரூ.3664 -ஐ திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயற்சி செய்துள்ளனர்.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ஒன்றுசேர்ந்து சிறுவர்களை கையும் களவுமாக பிடித்து, கோயில் நிர்வாகி ஜோதிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஜோதி சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சிறுவர்களை ஒப்படைத்துவிட்டு புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சிவகாஞ்சி போலீசார் சிறுவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தும்
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அடுத்த கரசங்கால் பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் கூலி தொழிலாளி. இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் 16 வயது சிறுமிக்கு அதிக வயதுடையவருக்கு கட்டாயப்படுத்தி திருமணம் நடத்த வடிவேல் திட்டமிட்டு திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார்.
இதனை அறிந்த 16 வயது சிறுமி சைல்ட் ஹெல்ப் லைன் எண்ணிற்கு போன் செய்து தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு குழந்தைகள் நல பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மணிமங்கலம் போலீசார் நேற்று கரசங்கால் பகுதியில் வந்து ரகசியமாக விசாரணை நடத்தினர். இதில் 16 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடு செய்வது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதனையடுத்து அந்த சிறுமியை மீட்டு காஞ்சிபுரத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.