இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி காஞ்சி கலெக்டர் அதிரடி உத்தரவு : சாலை பழுது நீக்கும் பணி தீவிரம்
இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலியாக காஞ்சி கலெக்டரின் உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத்துறையினர் மேம்பால சீரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
HIGHLIGHTS
இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலியாக செவிலி மேடு மேம்பாலத்தில் மழையால் ஏற்பட்ட பள்ளங்களை உடனடியாக சரி செய்ய கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது. இதில் காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் உள்ள ஆற்று மேம்பாலம் ஒரு கிலோ மீட்டர் தூரம் கொண்டது.
இது கனமழை காரணமாக மிகவும் சேதமடைந்து வாகன ஓட்டிகள் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவில் இருந்து வந்தது. பலர் இந்த பள்ளங்களில் விழுந்து விபத்துக்குள்ளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து இன்று காலை நமது செய்தித் தளத்தில் செய்தி வெளியானதையடுத்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நெடுஞ்சாலை துறை அலுவலர்களை அழைத்து உடனடியாக சீரமைப்புகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து ஜேசிபி உதவியுடன் மேம்பாலத்தில் உள்ள பள்ளங்களை பார் கலவை கொண்டு நிரப்பி பொதுமக்கள் சீரான பயணத்திற்கு நெடுஞ்சாலைத்துறையினர் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த சாலைகள் நெடுஞ்சாலை துறையிடமிருந்து தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் இதனுடைய அலுவலர்கள்தான் பரமரிப்பு பணிகளில் மெத்தனம் காட்டி வருவதாகவும் தெரிவித்தனர்.