புதிய கல் அரவை நிலையத்தினை தடைசெய்ய கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
பினாயூர் பகுதியில் புதிய கல் அரவை நிலையத்தால் கால்வாய்கள் சேதம் , சுற்றுச்சூழல், விவசாய பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டத்தில் அமைந்துள்ளது பினாயூர் கிராமம். பாலாற்றின் கரையோரம் இக்கிராமம் அமைந்துள்ளதால் பிரதான தொழிலாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்கிராமத்தின் ஏரிக்கரை ஓரத்தில் உள்ள விவசாய நிலத்தில் சர்வே எண் 329/1 ல் கல்குவாரி மற்றும் கல் அரவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் விவசாயம், நீர் பற்றாக்குறை , கால்நடை மேய்ச்சல் மற்றும் காற்று மாசுபடுதல் , சுவாச கோளாறு ஏற்படும் என கூறி அதனை அமைக்க தடை செய்ய வேண்டும் என மாநில சுற்றுச்சூழல் ஆணையம், வட்டாட்சியர், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என மனு அளித்தும் எவ்வித தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
தற்போது இதற்கான பணிகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது என அறிய வந்த கிராம மக்கள் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் ஒருங்கிணைந்து மனுக்கள் அளித்தனர். பாலாற்றில் இருந்து பினாயூர் மற்றும் அரும்புலியூர் வரத்து கால்வாய்களுக்கு இடையில் இக் கல் அரவை நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இதனால் வரத்து கால்வாய்கள் அனைத்தும் சேதம் அடைந்து விவசாயம் செய்ய இயலாத நிலை ஏற்படும் எனவும் இதை உடனடியாக தடை செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.