கூச்சல் , குழப்பங்களுடன் வெளியிடப்பட்ட வரைவு வாக்கு சாவடி மைய பட்டியல்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அனைத்து கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்கு சாவடி மைய பட்டியல் வெளியிடப்பட்டது
HIGHLIGHTS
கூச்சல் குழப்பங்களுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரைவு வாக்கு சாவடி மையங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வரைவு வாக்கு சாவடி மையங்கள் இடம் மாற்றம் பெயர் மாற்றம் மற்றும் புதிய வாக்கு சாவடி அமைப்பதற்கு ஏதுவாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் அலுவலர்களுக்கான முன்னேற்பாடு கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் , சட்டமன்ற தொகுதி வாரியாக வரைவு வாக்குச்சாவடி மையங்கள் பட்டியலினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட வருவாய் கோட்டாட்சியர்கள் ரம்யா, சரவணன் கண்ணன் முதலில் பெற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளை அழைக்கும் நிலையில் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் மற்றும் பாஜகவை அழைத்தபோது திமுக கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாநிலங்களில் ஆளும் கட்சியை அழைத்து முதலில் தர வேண்டும் எனவும் அதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மற்றும் இதர கட்சிகள் அழைத்து வரைவு பட்டியலை அளிப்பது மரபு எனவும் தெரிவித்து கூச்சல் எழுப்பியதால் கூட்டத்தில் பெரும் சர்ச்சை கிளம்பியது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அனைவரையும் அமர செய்து, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் தேர்தல் அலுவலக பிரிவு அலுவலர்களிடம் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற கேட்டுக் கொண்டதன் பேரில் மீண்டும் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் என அனைத்து கட்சி பிரமுகர்களுக்கும் வரைவு வாக்கு சாவடி பட்டியல் வழங்கப்பட்டது.
இதில் வாக்குச்சாவடி மையங்கள் ஏதேனும் பழுதடைந்த கட்டிடங்கள் மற்றும் கூடுதல் வாக்காளர்கள் இருப்பின் அதை பிரிக்கும் நிலை இருப்பின் தகுந்த அரசியல் கட்சிகள் ஒப்புதல் பெற்று அது குறித்து தகவல் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே காலை 10 மணிக்கு வரைவு வாக்கு சாவடி பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 1 மணி நேரம் அனைத்து கட்சியினரும் காத்திருந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இந்த கூச்சல் குழப்பத்தை தங்களுக்கு சாதகமாகவும், ஆட்சியருக்கு எதிராகவும் பயன்படுத்திக் கொண்ட அரசியல் கட்சிகள் செயல் மாவட்ட ஆட்சியருக்கு அதிர்ச்சி அளித்தது.