காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் 32,802 தேசிய கொடிகள் வழங்கல்
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் வீடு தோறும் கொடியேற்ற 32,802 தேசிய கொடிகள் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழா குறித்து கடந்த ஓராண்டாகவே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுபடுத்தி , பெருமைப்படுத்தும் வகையில் புகைப்பட கண்காட்சிகள் , நடன நிகழ்ச்சிகள் என கொண்டாடப்பட்டு வரும் வேளையில் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொண்டாட திட்டமிடப்பட்டது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனரின் அறிவுரைப்படி காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 40 கிராம ஊராட்சிகளிலும் உள்ள வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் 32,802 தேசிய கொடிகள் கொள்முதல் செய்யப்பட்டு இன்று ஊராட்சி ஒன்றிய குழு அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் , ஊராட்சி மன்ற தலைவர்களிடம் ஒப்படைத்தார்.
மேலும் வீடுகள் தோறும் ஏற்றப்படும் தேசிய கொடிகளின் நடைமுறைகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு இக்கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி மற்றும் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.