ஊரடங்கு விதிகளை மீறிய 6 பட்டு சேலை கடைகளுக்கு சீல், 16 கடைகளுக்கு ₹55ஆயிரம் அபராதம் - பெருநகராட்சி நடவடிக்கை
காஞ்சிபுரம் நகரில் கொரோனா விதிகளை மீறி செயல்பட்டு வந்த 6 பட்டு சேலை கடைகளை பெருநகராட்சி மூடி சீல் வைத்தது. மேலும் 16 கடைகளுக்கு அபராதமாக ரூபாய் 55 ஆயிரம் விதித்தது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் குறைந்து காணப்பட்டதால் தமிழக முதல்வர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சில தளர்வுகளை அறிவித்தார்.
அவ்வகையில் காஞ்சிபுரம் நகரில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பட்டுசேலை விற்பனையகங்கள் மற்றும் ஜவுளி கடைகள் திறக்க அனுமதி இல்லை என்பது தெளிவாக அறிவிக்கப்பட்டது.
இதனை மீறி தனியார் பட்டு சேலை கடைகள் தங்கள் கடையின் பின்புறம் வழியாக பொதுமக்களை அனுமதித்து வியாபாரம் நடத்தி வருவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்திக்கு வந்த புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்டு வந்த ஆறு பட்டுசேலை கடைகளுக்கு சீல் வைத்தும் மேலும் 16 கடைகளுக்கு அபராதமாக ரூபாய் ₹55ஆயிரம் விதித்தும் ஊரடங்கு விதி மீறிய அந்நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற திடீர் ஆய்விலும் 16 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.