/* */

வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி

காஞ்சிபுரம் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரணநிதியை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.

HIGHLIGHTS

வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி
X

பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.

காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் அறிவித்த மூன்று லட்ச ரூபாய்க்கான காசோலையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, எஸ்.பி.சுதாகர் நேரில் வழங்கினார்கள்.

காஞ்சிபுரம் அருகே வளத்தோட்டம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு தொழிற்சாலையில் நேற்று நண்பகல் திடீர் என வெடி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய 27 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களை தவிர மற்ற 18 பேர் காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று மதியம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்த 9குடும்பங்களில் குருவி மலை கிராமத்தைச் சேர்ந்த தேவி, சசிகலா, கோடீஸ்வரி,வளத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த விஜயா, கங்காதரன், காஞ்சிபுரம் தாயார் குளம் பகுதியைச் சார்ந்த பூபதி,சாமந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன், சங்குபாணி விநாயகர் கோவில் தெருவை சார்ந்த கௌதம்,உள்ளிட்ட 9 பேரின் குடும்பங்களை சேர்ந்தவர்களை நேரில் அழைத்து வந்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி எஸ் பி சுதாகர் ஆறுதல் கூறினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து அறிவிக்கப்பட்ட தலா 3 லட்ச ரூபாய்க்கான நிவாரண உதவிக்கான காசோலையை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் உயிரிழந்த குடும்பங்களின் உறவினர்களிடம் நேரில் வழங்கினார்கள்.

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை எப்போது வேண்டுமானாலும் அரசிடமும், அரசாங்க அதிகாரிகளிடமும் கேட்டு பெறலாம் என ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர்.

இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி,காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, வட்டாட்சியர்கள் மற்றும் வழத்தோட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மங்கை சேட்டு , களக்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் நளினிடில்லிபாபு மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

உயிரிழந்த குடும்பத்தினர் காசோலை பெற்றுக் கொண்ட போது கண்ணீர் மல்க அழுத காட்சி மனதை நெருட வைத்தது.

Updated On: 23 March 2023 3:20 PM GMT

Related News