கல்வி இடை நிற்றலை தவிர்க்க மாணவரின் புகைப்படத்தின் கூடிய காலண்டர்
கீழ்கதிர்பூர் நடுநிலை பள்ளியில் பயிலும் 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் புகைப்படத்தை காலண்டரில் பதிவு செய்து வழங்கி விழிப்புணர்வு மேற்கொண்டுள்ளார்.
HIGHLIGHTS
கல்வி இடைநிற்றலை தவிர்க்க மாணவர்களின் புகைப்படத்துடன் காலண்டர் வழங்கிய அரசு பள்ளி பட்டதாரி அறிவியல் ஆசிரியரின் செயல் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை பெண் கல்வி மற்றும் கல்வி இடை நிற்றலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நடுநிலை பள்ளியுடன் பலர் பள்ளி செல்வதில்லை என்பதும், தொடர்ச்சியாக பள்ளிக்கு வராத மாணவர்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களின் வீடு தேடி சென்று பெற்றோர்களை சந்தித்து மீண்டும் அவர்கள் கல்வியை தொடர ஆசிரியர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பழமலைநாதன், எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களின் அரசு சீருடை உடனான புகைப்படம் எடுத்து அதனை தினசரி காலண்டரில் பதிவு செய்து அவர்களுக்கு வழங்கி உள்ளார்.
இப்பள்ளியில் 88 ஆண்கள், 91 பெண்கள் என மொத்தம் 179 பேர் கல்வி பயிலும் நிலையில், எட்டாம் வகுப்பில் 22 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இப்பகுதி கிராமப்புற பகுதி என்பதும் பட்டியலின மாணவர்கள் 77 பேரும், பழங்குடியினமானவர்கள் 26 பேர் பயின்று வருவதால் கல்வி இடைநிற்றல் உருவாக அதிக வாய்ப்புள்ளது என அறிந்து இது போன்ற எண்ணம் உருவானதாக பட்டதாரி அறிவியல் ஆசிரியர் தெரிவிக்கின்றார் .
இது குறித்து பள்ளி மாணவர் கூறுகையில், நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி கற்க வேண்டும் என எண்ணம் உருவாகும் முறையில் என்னுடைய புகைப்படத்தை அச்சிட்டு நாட்காட்டி வழங்கியது எங்களின் பெற்றோர் மட்டுமல்லாமல், எங்களது உறவினர்களுக்கும் பெருமிதம் மகிழ்ச்சி ஏற்படுத்தி உயர்கல்வி கற்க பெரிதும் ஊக்கப்படுத்தி வருகின்றதாகவும், என்னுடைய புகைப்படம் உலக அளவில் உள்ள காலண்டரில் வரும் அளவிற்கு கண்டிப்பாக உயர்கல்வி பயின்று சாதனை படைப்பேன் என அரசு பள்ளி மாணவன் கூறுகிறார்.
இதுகுறித்து பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பழமலைநாதன் கூறுகையில் , பழங்குடியின, பட்டியலின மாணவர் உள்ள பகுதி என்பதால் கல்வி இடைநிற்றலுக்கு அதிக வாய்ப்பு உள்ளதை கருத்தில் கொண்டு கடந்த மூன்று ஆண்டுகளாக , இதுபோன்று இப்பள்ளியில் இறுதி வகுப்பு பயிலும் மாணவர்களின் புகைப்படத்தை அச்சிட்டு தினசரி காலண்டர் வழங்கி அவர்களை இடை நில்லா கல்வி கற்கும் வகையிலும் , அறிவியலாளர்கள், சாதனையாளர்கள் அவர்களின் திறமைகள் எடுத்துக் கூறி இவர்களுக்கு உத்வேகம் அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த நடுநிலைப் பள்ளியில் ஒன்பது கணினிகளும் , ஓய்வு பெற்ற பல்வேறு அலுவலர்கள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகளுக்கும் நடைபெறுகிறது.
ரூபாய் 1.7 லட்சம் மதிப்பிலான இன்ட்ராக்டிவ் வசதி கூடிய திரைகளும் இந்த அரசு நடுநிலைப் பள்ளிகளில் உள்ளது மாணவர்களுக்கு பெரிதும் உதவுகிறது.
அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை பல்வேறு வகைகளில் ஊக்கப்படுத்தும் ஆசிரியர்களின் செயல்களில் இந்த காலண்டர் செய்கையும் , பெற்றோர்களை மட்டுமில்லாது, கல்வித்துறை அதிகாரிகள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினிருந்தும் வரவேற்பை பெற்றுள்ளது.