ஊரக உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணிபுரியவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பதவிகளுக்கான தேர்தலில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி குறித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 180 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 412 ஊராட்சி மன்றத்தலைவர்கள் மற்றும் 3,162 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்காக 1,889 வாக்குச்சாவடி மையங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் ஒரு தலைமை அலுவலர், 6 வாக்குப்பதிவு அலுவலர்கள், மற்றும் இரண்டு வார்டு வாக்குச்சாவடிகளில் கூடுதலாக ஒரு வாக்குப்பதிவு அலுவலர் என மொத்தம் 7,222 அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெற்றன. மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக 15,584 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அதன் தொடர்பாக இன்று சின்னசேலம் சிறு மலர் மேல்நிலைப்பள்ளியில் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சவடி மையங்களில் பணிபுரியவுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர், தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வழங்கப்படும் முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இப்பயிற்சி வகுப்பிலான தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. பயிற்சியில் பங்கேற்ற அலுவலர்கள் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நாளன்று தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்புடன் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது என அவர் தெரிவித்தார்.
இவ்வாய்வின்போது உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி.ரெ.மஞ்சுளா, சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.