கள்ளக்குறிச்சி தகன மேடையில் ஜன்னல் வழியாக வெளியேறும் புகை: மக்கள் அவதி
கள்ளக்குறிச்சி நகராட்சி எரிவாயு தகன மேடையிலிருந்து புகை, ஜன்னல் வழியாக வெளியேறுவதால் சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகிறது.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சியில் கொரோனா தொற்றால் 10க்கும் மேற்பட்டவர்கள் தினமும் இறந்து வருகின்றனர். இதனுடன் பொதுவான இறப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
இதனால் கள்ளக்குறிச்சியில் உள்ள எரிவாயு தகனமேடையில் தினமும் 15க்கும் மேற்பட்ட சடலங்கள் எரிக்கப்படுகின்றன. இங்கு சடலங்கள் எரியூட்டும் போது ஏற்படும் புகை, புகைப்போக்கி வழியாக வெளியேறாமல் ஜன்னல் வழியாக வெளியேறுகிறது. இதனால் குறைந்த உயரத்தில் புகை காற்றுடன் கலந்து அருகில் உள்ள வீடுகள், சாலைகளில் பரவுவதால் அந்த வழியாக செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுச்சூழல் சீர்கேடும் ஏற்படுகிறது.
மேலும் கொரோனா தொற்று காரணமாக இங்கு வரும் சடலங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், காஸ் சிலிண்டர் கிடைக்காமல், தகனமேடையில் விறகுகளைக் கொண்டு சடலங்கள் எரியூட்டும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.
எனவே, நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தகனமேடையைச் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்