கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி சிறுவங்கூரில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று நேரில் ஆய்வுசெய்தார். தொடர்ந்து அவர் அங்குள்ள கூடுதல் கொரோனா சிகிச்சை மையத்தையும் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
கள்ளக்குறிச்சியில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கட்டிடம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த கல்லூரியில் வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
தமிழகத்தில் 2 ஆயிரம் மருத்துவர்கள், 6 ஆயிரம் செவிலியர்கள், 3 ஆயிரத்து 700 மருத்துவம் சாரா பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல் கடந்த ஒரு வார காலத்தில் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு 30 மருத்துவர்கள், 68 செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.