govt schools high pupil strength in tamil அரசுபள்ளிகளில் 1:40 எனும் விகிதாச்சாரம் பின்பற்றப்படுமா? வகுப்பிற்கு 90 மாணவர்களுடன் போராடும் ஆசிரியர்கள்
govt schools high pupil strength in tamil தமிழக அரசு பள்ளிகளில் பலவற்றில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள்இல்லாததால் பெருத்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் ஆசிரியர்கள்.
HIGHLIGHTS
govt schools high pupil strength in tamil
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயல்படும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்கள் விகிதாச்சாரம் உரிய முறையில் பின்பற்றப்படாததால் ஆசிரியர்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகும் நிலையே இன்று வரை தொடர்ந்து வருகிறது. இதற்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் துரித கதியில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அவர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தினைப் பொறுத்தவரை பள்ளிக்கல்வி்த்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் மொத்த எண்ணிக்கையானது 37554 பள்ளிகள். மாணவர்களின் எண்ணிக்கையானது 5275203 ஆசிரியர்களின் எண்ணிக்கை 225400 அலுவலர்கள் 14709 என்ற விவரத்தினை பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரபூர்வ இணையதளம் தெரிவிக்கிறது.
மாணவிகளுக்கு போதிய டெஸ்க், பெஞ்ச் இல்லாத நிலையால் கீழே அமர்ந்து படிக்கின்றனர் (கோப்பு படம்)
இந்த கணக்குப்படி பார்த்தாலே மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் 1:40 விகிதாச்சாரப்படி ஆசிரியர்கள் இல்லாத நிலைதான் தொடர்கிறது. பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும் 40 மாணவர்கள் இருந்தால் கற்றலும், கற்பித்தலும் உரிய முறையில் சிறப்பாக இருக்கும். இதற்காகவே இந்த விகிதாச்சாரம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் பெரும்பாலான அரசு பள்ளிகளில் இதற்கு நேர்மாறான நிலைதான் இன்றளவில் தொடர்ந்து வருகிறது.
தமிழகத்தில் செயல்படும் பெரும்பாலான பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் 70,80,90 மாணவர்கள் உள்ளனர். நீங்களே யோசித்து பாருங்கள். ஆசிரியர் வருகைப்பதிவேடு எடுத்தாலே பாதி நேரம் போய்விடும் நிலைதான்தொடர்கிறது. அதுமட்டும் அல்லாமல் வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஆசிரியர்கள் நடத்தும் பாடம் அனைத்து மாணவர்களுக்கும் சென்று அடையுமா? என்ற சந்தேகம் தோன்றுகிறது. ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் எனும்போது அனைவரையும் ஆசிரியர் நடத்தும் பாடம் உரிய முறையில் கவனிப்பார்கள் மாணவர்கள். ஆனால் 90 பேர் உள்ள வகுப்பில் ஆசிரியர் பாடம்நடத்தும் போது இப்போதுள்ள மாணவர்களில் பலர் சரிவர கவனிப்பதில்லை என்ற குற்றச்சாட்டே பெரும்பாலான பள்ளிகளில் நிலவி வருகிறது. இதற்கான பிரச்னையில் ஆசிரியர் கவனத்தை திருப்பினால் பாடத்தினை நடத்தமுடியாது.
இதுமட்டும் அல்லாமல் பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ள நிலையில் ஆசிரியர்களின் நிலை மிகவும் பரிதாபமான நிலைதான் நீடிக்கிறது. இதனால் சமீப காலங்களில் ஆசிரியர்களை ஒரு சில மாணவர்கள் கிண்டலும், கேலியும் செய்தால் கூட பொறுத்துக்கொண்டு மனஉளைச்சலோடு காலம் கடத்தி வருகின்றனர் ஆசிரியர்கள்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் படித்த மாணவர்கள்தான் வகுப்பறையைச் சுத்தம் செய்தல், கரும்பலகைக்கு கருப்பு வண்ணம் தீட்டுதல், தோட்டபராமரிப்பு, குடிதண்ணீர் ஏற்பாடு உள்ளிட்டவகைளைச் செய்யும் வகையில் வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களைக் கருத்தில் கொண்டு அணி அணியாக பிரித்து இந்த வேலைகளைச் செய்து வந்ததை இக்கால மாணவர்களின் பெற்றோர்களும் நன்கு அறிவர்.
ஆனால் இக்காலத்தில் பள்ளிகளில் ஏதாவது ஒரு வேலையைச் செய்துவிட்டால் அதனை உடனே போட்டோ எடுத்து சமூக வலை தளங்களில் பரப்பி உரிய ஆசிரியரின் மேல் நடவடிக்கை எடுப்பதுதான் தொடர்ந்து நடந்து வருகிறது. இது எந்த வகையில் நியாயம்? தாம் படிக்கும் பள்ளிக்காகதானே இந்த வேலைகளைச் செய்கிறார்கள். ஆசிரியர் வீட்டிலா வேலை செய்தனர்?
அரசு பள்ளிகளில் ஒரே வகுப்பில் அதிகமான மாணவிகளின் எண்ணிக்கை (கோப்பு படம்)
பள்ளிகளில் எந்த வேலையையும் செய்யாத மாணவ, மாணவிகள் வீட்டில் மட்டும் எப்படிங்க வேலை செய்வாங்க.. இதற்கு பெற்றோர்களே காரணம். தாம்படிக்கும் பள்ளியில் செய்யும் வேலையில் எந்தவித கேவலமும் இல்லை. அப்போதுதான் ஒழுக்கம் வரும்.இது தெரியாமல் இக்கால பெற்றோர்கள் ஆசிரியர்களை குற்றம் சுமத்துவது நியாய மற்றது. ஆசிரியர்கள் அடிக்காததால் பல மாணவர்கள் இன்று திசை மாறி பயணிக்கின்றனர்.இதனால் அவர்களுடைய எதிர்காலம் பாழாகிப்போகிறது. எனவே அரசும் இந்த விஷயத்தில் விதிகளை சற்று தளர்த்தவேண்டும். இக்காலத்தில் உயர் பதவியில் உள்ளவர்கள் கூட அக்காலத்தில் படிக்கும்போது பல வேலைகளைச் செய்து வந்தததோடு ஆசிரியர்களிடம் கடுமையான தண்டனைகளை அனுபவித்தனர். கட்டுப்பாடு அக்காலத்தில் இருந்ததால்தான்இன்று பலர் நல்லநிலையில் உள்ளனர் என்பதை அவர்களே பல நிகழ்வுகளில் மலரும் நினைவுகளாக சொல்லி வருகின்றனர் என்பதுதான் பாராட்டத்தக்கது.
ஆசிரியர்களின் பணிப்பளு
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்களுக்கு வேலை என்பது கற்பித்தல் மட்டுந்தான். காரணம் அப்போது செல்போன் இல்லை. இதனால் எல்லாமே மேனுவலான பராமரிப்புதான். மேலும் பல பள்ளிகளில் அலுவலக வேலைகளைச் செய்ய ஒவ்வொரு பள்ளியிலும் கிளார்க் இருந்தனர். ஆனால் தற்காலத்தில் ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் பல கட்ட வேலைகளைப் பார்க்கும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இதோடு இவர்கள் வகுப்பறைகளிலும் பாடம் கற்பிக்க வேண்டிய நிலை. வகுப்பு மாணவன் ஒவ்வொருவருக்கும் பலநிலைகளிலான பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டியுள்ளது. மேலும் இணையதளத்தில் அப்டேட் செய்யும்வேலை,என பள்ளி விட்டுவந்தாலும் வீடுகளில் இந்த பணிகளைச் செய்ய வேண்டியுள்ளதால் பல ஆசிரியர்கள் பெருத்த மனஉளைச்சலுக்கே ஆளாகின்றனர்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
தமிழகத்தில் உள்ள பல அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவும்ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ள பள்ளிகளும் உள்ளது. அதுவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதனை நாம் கண்டெடுக்கலாம். அந்த வகையில் ஆசிரியர்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில் இருந்து ஒரு வகுப்பில் 90 மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்களை பணி நிரவல் அடிப்படையில் டிரான்ஸ்பர் செய்ய வேண்டும். இதனை தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் பள்ளிக்கல்வி்த்துறையானது உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் பணிநிரவல் மாறுதலை அமல்படுத்த வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறை விழிக்குமா?
மேலும் பள்ளிக்கல்வித்துறையானது 1:40 என்ற விகிதாச்சாரத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பின் போதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். ஒரு நாடோ மாநிலமோ முன்னேற வேண்டும் எனில் முதன் முதலாக கல்வித்துறை நல்லமுறையில் செயல்பட வேண்டும். இதுதான் முதுகெலும்பே. என்பதை நினைவில் கொண்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்த விஷயத்தில் துரித கதியில் செயல்பட்டு பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்களை நியமனம் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், பணி நிரவல் அடிப்படையிலான டிரான்ஸ்பருக்கும் ஏற்பாடு செய்து ஆசிரியர்களின் மனஉளைச்சலைத் தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.