காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
காலிங்கராயன் வாய்க்கால் திறக்கப்பட்ட நாளான இன்று அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் வாய்க்கால் வெட்டி 740 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதையொட்டி பவானியில் உள்ள காலிங்கராயன் சிலைக்கு ஈரோடு மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர்ப்பாசனமாக விளங்கி வரும் காலிங்கராயன் வாய்க்கால் லிங்கையன் என்கிற காலிங்கராயன் என்பவரால் வெட்டப்பட்டது. இந்தக் கால்வாயில் செல்லும் பாசனநீர் மூலமாக ஆண்டுக்கு மூன்று போகம் சாகுபடி செய்ய முடியும். தொடர்ந்து, 10 மாதங்கள் தண்ணீர் செல்லும் இந்த வாய்க்கால் முற்றிலும் மண்ணால் கட்டப்பட்டது.
பவானி ஆற்றிலிருந்து 90 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் இந்த வாய்க்காலில் உள்ள 786 மதகுகள் மூலம் 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நெல், மஞ்சள், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன. பவானி ஆற்றையும், நொய்யல் ஆற்றையும் இணைக்குமாறு வெட்டப்பட்டுள்ள இந்தக் கால்வாயில் எந்தப் பகுதியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டாலும் தண்ணீர் செல்லும் வகையில் வெட்டப்பட்டுள்ளதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.மேலும், நொய்யல் ஆற்றையும், அமராவதி ஆற்றையும் இணைக்கவும் திட்டமிடப்பட்டிருந்ததால் நதிகள் இணைப்புக்கு 740 ஆண்டுகளுக்கு முன்பே அச்சாரம் போடப்பட்டதாகக் கருதப்படுகிறது.
காலிங்கராயன் கால்வாய் வெட்டப்பட்டு பாசனத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டு 740 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவானி காளிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் உள்ள காலிங்கராயன் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கழக அமைப்புச் செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ , ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், பவானி சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.கருப்பணன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் பெருந்துறை சட்டமன்ற தொகுதி சார்பாக அம்மா பேரவை மாநில இணைச் செயலாளரும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினருமான ஜெயக்குமார் எம்எல்ஏ கலந்து கொண்டு காலிங்கராயன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.