அந்தியூர் அருகே பாலாற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே உள்ள பாலாற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பர்கூர் குட்டையூர் பகுதியை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி புட்டியம்மாள். மகாதேவனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 12-ந் தேதி மகாதேவன் கூலி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் பர்கூர் கிராமம் அருகே உள்ள குட்டையூர் மக்கம்பாளையம் பகுதியில் உள்ள பாலாற்றில் மகாதேவன் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மகாதேவன் உடலை மீட்டு அந்தியூரில் இருந்து மருத்துவர் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சம்பவத்தன்று மகாதேவன் குடிபோதையில் அந்த வழியாக வந்த போது தவறி ஆற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது மனைவிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.