அந்தியூரில் பட்டுச்சேலைகள் வாங்கி ரூ.90 லட்சம் மோசடி செய்த பெண்
அந்தியூரில் கைத்தறி நெசவாளர்களிடம் பட்டுச்சேலை வாங்கி ரூ.90 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
அந்தியூரில் கைத்தறி நெசவாளர்களிடம் பட்டு சேலை வாங்கிக் கொண்டு பணம் தராமல் ரூ.90 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள மூன்று பேரை தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர், தவிட்டுப்பாளையம் பகவதிஅம்மன்கோயில் வீதியைச் சேர்ந்தவர் நந்தகோபால் மகன் லட்சுமணன் (வயது 45). கடந்த 25 ஆண்டுகளாக கைத்தறி பட்டுச்சேலை நெசவு செய்து ஜவுளிக் கடைகளுக்கு மொத்தமாக வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு கோவை மாவட்டம் சுங்கம் சின்னையா பிள்ளை வீதியில் வசிக்கும் கார்த்திகேயன் மனைவி சுஜாதா (42) மற்றும் சேலத்தைச் சேர்ந்த ரவி ஆகியோர் அந்தியூருக்கு வந்து லட்சுமணனிடம் அறிமுகம் செய்து கொண்டதோடு, தங்களுக்கு சொந்தமான ஜவுளிக்கடையில் விற்பனை செய்ய மொத்தமாக பட்டுச் சேலைகள் கொள்முதல் செய்து வந்துள்ளனர்.
இதனையடுத்து, அந்தியூரில் நெசவுத்தொழில் செய்யும் பலரும் சுஜாதாவுடன் பட்டு சேலை வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில், சென்னையில் துணிக்கடை நடத்தும் குமார், கோவையில் துணிக்கடை நடத்தும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்த சுஜாதா அவர்களுக்கும் பட்டு சேலைகள் கொடுக்கும்படி கூறியுள்ளார். இருவரும், வியாபாரத்துக்கு பட்டு சேலை வாங்கிச் சென்ற பின்னர், நெசவாளர்களுக்கு முறையாக பணம் தராமல் தாமதப்படுத்தி வந்தனர். இதுகுறித்து, பலமுறை தொடர்பு கொண்டு கேட்டும் பணம் தரவில்லை.
மேலும், அந்தியூரில் பட்டுச்சேலை விற்பனையில் ஈடுபட்ட பாண்டியம்மாள், முனுசாமி, சம்பத், சகுந்தலா, அன்பழகன், ராஜேந்திரன், எல்லப்பாளையம் சம்பத் ஆகியோரிடம் மொத்தம் சுமார் ரூ. 90 லட்சத்துக்கு மேல் பட்டு சேலை வாங்கிக் கொண்டு நம்பிக்கை மோசடி செய்துள்ளனர். எனவே, சுஜாதா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் பட்டு சேலை மோசடியில் ஈடுபட்ட சுஜாதா நேற்று கைது செய்யப்பட்டு பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து தலைமறைவாக உள்ள மற்ற மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.