அந்தியூருக்கு தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் வருகை
Rescue Team -அந்தியூரில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
HIGHLIGHTS
Rescue Team -ஈரோடு மாவட்டம், அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்ததால், வரட்டுப்பள்ளம் அணை, எண்ணமங்கலம் ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி, பெரிய ஏரி, வேம்பத்தி ஏரி, பிரம்மதேசம் ஏரி உள்ளிட்ட 9 நீர்த்தேக்கங்கள் நிரம்பி வெள்ளநீர் வெளியேறி வருகிறது. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில், 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்ததால், அந்தியூர் நகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது.
இதனால் பெரியார் நகர், அழகு நகர், அண்ணாமடுவு பேருந்து நிலைய பகுதிகள், வெள்ளக்காடாக தண்ணீரில் மிதந்தது. இப்பகுதி பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதிலும், அழகுநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் படிக்கட்டுகளை மூழ்கடிக்கும் அளவுக்கு பெருக்கெடுத்து ஓடியது. பெரியார் நகர், அழகு நகர், அண்ணாமடுவு உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.மேலும் அண்ணாமடுவு பகுதியில் 1 கிமீ தூரத்திற்கு நீர் சூழ்ந்து வெள்ளைக் காடாக காட்சியளித்தது. இதனை வேடிக்கை பார்க்க நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதியில் குவிந்தனர்.
இதனையடுத்து, அந்தியூர் பெரிய ஏரி வழியாக வெள்ளித்திருப்பூர் செல்லும் சாலை, அம்மாபேட்டை பவானி செல்லும் அண்ணாமடுவு சாலை , சுமைதாங்கி ஆகிய பகுதிகளில் வெளியேறிய வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று ஒரு நாள் அந்தியூர் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வரட்டுப்பள்ளம் அணை மற்றும் அந்தியூர் பகுதியில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, அண்ணாமடுவு பகுதியில் வெள்ளம் படிப்படியாக குறைந்த நிலையில், கெட்டிசமுத்திரம் ஏரியிலிருந்து சுமைதாங்கி வழியாக செல்லும் தண்ணீரின் அளவும் பெரிய ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீரின் அளவும் குறையவில்லை.தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னையில் பயிற்சி பெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.தேசிய பேரிடர் மேலாண்மை குழுவில் பயிற்சி பெற்ற தமிழக அரசு பேரிடர் மேலாண்மை குழு சென்னை பூந்தமல்லி 13ம் அணியை சேர்ந்த மீட்புக் குழுவினை சேர்ந்த 35 பேர் அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நேற்று சுமைதாங்கி பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மீட்பு குழுவினர், அவ்வழியே தண்ணீரில் சாலையைக் கடந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மறுபகுதிக்கு செல்ல உதவி செய்தனர். மேலும், அந்தியூர் பகுதியில் கனமழையின் தீவிரம் குறையும் வரை வருவாய்த்துறையினர் தீயணைப்பு துறையினர், காவல் துறையினருடன் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளதாக, ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2