டி.என்.பாளையம் வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டி.என்.பாளையம்.வனச்சரக பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பதற்காக கேமரா பொருத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்
HIGHLIGHTS
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டி.என்.பாளையம்.வனச்சரக பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பதற்காக கேமரா பொருத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1,411 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு பவானிசாகர், டி.என்.பாளையம், கடம்பூர், விளாமுண்டி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரகள்ளி ஆகிய பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, கரடி, செந்நாய், கழுதைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.
இந்நிலையில், டி.என்.பாளையம் வனச்சரக பகுதிகளில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் வனச்சரகர் மாரியப்பன் தலைமையில் வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், டி.என்.பாளையம் வனச்சரக பகுதிகளில் 7 பீட்டுகளாக பிரிக்கப்பட்டு அதில் 68 இடங்களை தேர்வு செய்து புலிகள் நடமாடுவதை வனத்துறையினர் கண்டறிவர். அதில், ஒரு இடத்திற்கு இரண்டு கேமராக்கள் வீதம் பொருத்தப்பட்டு மூன்று நாட்கள் பணிகள் நடைபெறும். அதைத் தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு ஒரு முறை கேமராவில் புலிகள் நடமாட்டம் குறித்து கண்காணித்து கணக்கெடுப்பர். இந்த பணி முடிவடைய ஒரு மாத காலம் ஆகும் என்று தெரிவித்தார்.