ஆப்பக்கூடலில் கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி போலீசில் புகார்
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே மாயமான கணவரை கண்டுபிடித்து தருமாறு மனைவி ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி கிராமம் நடுதோட்டத்தை சேர்ந்த கீதா (43) என்பவர் ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார்.
அம்மனுவில், ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி நடுதோட்டத்தை சேர்ந்த மினிசாமி மகன் சுரேஷ் (44) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு தீபக்ராஜா என்ற மகன் உள்ளார். எனது கணவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தனக்கும், கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. அதன் பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனது கணவரை விட்டு பிரிந்து தனது மகனுடன் கடந்த ஒன்றரை வருட காலமாக கவுந்தப்பாடி அருகே தருமாபுரியில் உள்ள எனது அம்மாவின் வீட்டில் வசித்து வருகிறேன்.
இந்நிலையில், எனது கணவர் தன்னிடம் தினமும் ஒரு முறை செல்போனில் பேசுவார். கடந்த 24-ம் தேதி தேதி மதியம் 2.30 மணியளவில் தன்னிடம் செல்போனில் பேசி விட்டு இரவு 8 மணியளவில் இரண்டு முறை தனக்கு செல்போனில் அழைத்தார். நான் அவரது அழைப்பை ஏற்கவில்லை.
பின்னர், மறுநாள் காலை தனது கணவரிடமிருந்து செல்போன் அழைப்பு வராததால், அவரது செல்போனிற்கு பலமுறை அழைத்தும், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் தானும், தனது உறவினர்களும் கூத்தம்பூண்டியில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்தும், அக்கம், பக்கம் விசாரித்தும் அவரை பற்றி தகவல் கிடைக்கவில்லை. எனவே, மாயமான எனது கணவரை மீட்டு தரவேண்டும், என அம்மனுவில் கூறி இருந்தார்.
இதுதொடர்பாக மனுவை பெற்ற ஆப்பக்கூடல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.