ஈரோடு மாவட்டத்தில் 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மனீஷ் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் தற்போது சுமார் 39 சதவீதம் அளவுக்கு பசுமைப் பரப்பு உள்ளது.இந்த பரப்பை மேலும் அதிகரிக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மரக்கன்றுகள் நட்டு பசுமைப் பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நாட்டு மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பசுமை தமிழகம் திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2022-23ம் நிதியாண்டில் 7 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. நடப்பு 2023- 24ம் ஆண்டில் சுமார் 20 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்து ஒவ்வொரு துறைக்கும் எண்ணிக்கை குறியீடு அளிக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, வனத்துறைக்கு 2 லட்சம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு 1 லட்சம், வேளாண் துறைக்கு 2 லட்சம், தோட்டக்கலைத் துறைக்கு 1 லட்சம், நெடுஞ்சாலைத் துறைக்கு 2 லட்சம், பள்ளிக் கல்வித் துறைக்கு 1 லட்சம், நகர்ப்புற உள்ளாட்சித் துறைக்கு 1 லட்சம், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 2 லட்சம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி வரும் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புங்கன், வேப்பம், புளியமரம், நாவல் உள்ளிட்ட பல்வேறு வகையான செடி கள் நடவு செய்யப்பட உள்ளது. விரைவில் பருவமழை தொடங்க உள்ளதால் இப்பணிகளை ஒரு மாதத்திற்குள் முடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.