கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் குண்டம் விழா
கோபி அருகே பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வரும் 12-ம் தேதி நடக்க உள்ளது.
HIGHLIGHTS
கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வரும் 12-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், குண்டத்துக்கான கரும்புகளை (விறகுகள்) பக்தர்கள் வழங்கி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பாரியூரில் கொண்டத்துக் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் குண்டம் திருவிழா. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்கினர். பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு குண்டம் திருவிழா, கடந்த மாதம் 29-ம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதத்தை தொடங்கியுள்ளனர்.
குண்டம் திருவிழாவையொட்டி, நேற்று மாலை சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். நாளை (11-ம் தேதி) மாவிளக்கு பூஜையும், அம்மன் பூத வாகன காட்சியும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, 12-ம் தேதி அதிகாலை தொடங்குகிறது. இதற்காக 50 அடி நீள குண்டம் தயார் செய்யப்படவுள்ளது. குண்டத்துக்கு தேவையான தொடர்ந்து, கரும்புகளை (விறகுகள்) பக்தர்கள் கடந்த சில நாட்களாக வழங்கி வருகின்றனர். அவை கோயில் முன்பாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்க வரிசையில் காத்திருக்கும் வகையில், தடுப்புகள் அமைக்கும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
குண்டம் இறங்கும் நிகழ்வைத் தொடர்ந்து 13-ம் தேதி மாலை 4 மணி அளவில் தேர்த்திருவிழாவும், 14-ம் தேதி மலர் பல்லக்கு வீதி உலாவும் நடைபெற உள்ளது. அன்று இரவு 11 மணி அளவில் மலர் பல்லக்கில் அம்மன் புறப்பட்டு கோபி பெருமாள் கோவிலுக்கு கொண்டு செல்லப்படுவார். 15-ம் தேதி தெப்ப உற்சவமும், 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை மஞ்சள்நீர் உற்சவமும் நடக்கிறது. இதையடுத்து மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.