ஈரோட்டில் பரீட்சார்த்த முறையில் காலை சிற்றுண்டி திட்டம் இன்று துவக்கம்
ஈரோடு மாவட்டத்தில் அரசு துவக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம், அமல்படுத்தப்பட உள்ளதையடுத்து, இன்று பரீட்சார்த்த முறையில் துவங்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தமிழக அரசின் முழுமையான நிதியைக் கொண்டு அரசு துவக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் 1,545 அரசு துவக்கப்பள்ளிகளை சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு, காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்துக்காக ரூ.33.56 கோடி ஏற்கனவே ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி துவக்கி வைக்க உள்ளார். முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலை தூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்தை முன்கூட்டியே பரீட்சார்த்த முறையில் செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஈரோடு மாநகராட்சி பகுதியில் இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 26 துவக்கப்பள்ளிகளில் இன்று காலை மாணவர்களுக்கு ரவா கேசரி. சேமியா ஆகியவை வழங்கப்பட்டது. மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஒட்டு மொத்தமாக உணவு தயாரிக்கப்பட்டு மாநகர பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு, காலை 8 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.