ஈரோட்டில் நாளை 'தமிழ்நாடு நாள்' விழா கட்டுரை, பேச்சுப் போட்டி
Speech Competion - தமிழ்நாடு நாள் விழாவையொட்டி, ஈரோடு மாவட்ட அளவில் நடைபெற உள்ள கட்டுரை, பேச்சு போட்டிகள் நாளை (12-ம் தேதி) நடக்கிறது.
HIGHLIGHTS
Speech Competion - தமிழ்நாடு நாள் விழாவையொட்டி, ஈரோடு மாவட்ட அளவில் நடைபெற உள்ள கட்டுரை, பேச்சு போட்டிகள் நாளை (12-ம் தேதி) நடக்கிறது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பேரறிஞர் அண்ணா அவர்களால் தாய்த் தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு எனப்பெயர் சூட்டிய நாளான ஜூலை 18-ம் நாள், இனி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது. இவ்வறிவிப்பின்படி, தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப் பெற உள்ளன.
இதன்படி, வருகிற 18-ம் தேதி தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு. ஈரோடு மாவட்டத்தில் நாளை (12-ம் தேதி) கலைமகள் கல்வி நிலையத்தில் காலை 10 மணிக்கு பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகளில் 6 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்கள் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவியர்கள் தாங்கள் பயிலும் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று வரவேண்டும்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், தமிழ்த்திரை உலகத்தை புரட்டிப்போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல் என்ற தலைப்பில் பேச்சு போட்டியும் நடைபெறும். இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பயிலும் மாணவ-மாணவியர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.