திராவிட கழகத்தின் மூத்த நிர்வாகி மாரடைப்பால் உயிரிழப்பு: அரசியல் பிரமுகர்கள் இரங்கல்
குருவரெட்டியூரில் திராவிட கழகத்தின் மூத்த நிர்வாகி பிரகலாதன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
HIGHLIGHTS
அம்மாபேட்டை அடுத்து உள்ள குருவரெட்டியூரை சேர்ந்தவர் பிரகலாதன் (வயது 66). இவர் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கடந்த 1977-ம் ஆண்டு முதல் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டு, கடந்த 44 வருடங்களாக திராவிடர் கழகத்தில் பொறுப்பு வகித்து வந்தார். பெரியாரின் சீர்திருத்த கொள்கைகளை மக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தவர். ஏழை எளிய மக்களின் கோரிக்கைகளை போராட்ட களத்தில் நின்று வென்று கொடுத்தவர்.
தற்போது திராவிடர் கழகத்தின் மண்டல தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக சித்தார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரகலாதன் காலமானார். திமுக எம்.பி. அந்தியூர் செல்வராஜ் மற்றும் திராவிடர் கழகத்தின் முக்கிய பிரமுகர்கள், திமுக., அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பிரகலாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதனை தொடர்ந்து நேற்று மதியம் இறுதிச்சடங்கு நடைபெற்றது.