கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு 1,350 கன அடியாக அதிகரிப்பு
பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் வினாடிக்கு 1,350 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது
HIGHLIGHTS
பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,350 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த கீழ்பவானி பாசனம் மூலமாக ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசனம் பெற்று வருகின்றது. இந்த நீரைக் கொண்டு விவசாயிகள் நெல், கரும்பு, மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்ட பல பயிர்களை பயிரிட்டு பாசனம் பெற்று வருகின்றனர்
ஈரோடு மாவட்டம்,பவானிசாகர் அணையில் இருந்து முதல் போக நன்செய் பாசனத்திற்கு, கீழ்பவானி வாய்க்காலில், கடந்த 19ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக, 200 கன அடி திறந்த நிலையில், நேற்று முன்தினம் (ஆக.20) மாலை 750 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நேற்று (ஆக.21) காலை 1,250 கன அடி நீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஆக.22) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,350 கன அடியாக அதிகரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அதேசமயம், அணையில் இருந்து அரக்கன்கோட்டை - தடப்பள்ளி மற்றும் காலிங்கராயன் பாசனத்துக்கு, 850 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக 100 கன அடி நீரும் என மொத்தம் 2,300 கன அடி வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம், 82.31 அடி, நீர் இருப்பு - 16.94 டிஎம்சி, நீர் வரத்து 698கன அடியாகவும் இருந்தது.