ஈரோடு மாவட்டத்தில் தொடர்மழையால் நிரம்பிய நீர்நிலைகள்
தொடர்மழையால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 90 சதவீத நீர்நிலைகள் முழுமையாக நிரம்பியதையடுத்து, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
HIGHLIGHTS
தொடர் மழை காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 90 சதவீத நீர்நிலைகள் முழுமையாக நிரம்பியதையடுத்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில், கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக பவானி, அந்தியூர்,அம்மாபேட்டை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, கொடிவேரி, கவுந்தப்பாடி, மொடக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு மழை பெய்துள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள் ஆகியவை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மொத்த நீர்நிலைகளில் 90 சதவீத நீர்நிலைகள் முழுமையாக நிரம்பி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, அரக்கண்கோட்டை தடப்பள்ளி, மேட்டூர்மேற்கு, காலிங்கராயன் உள்ளிட்ட அனைத்து பாசனங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. பாசனங்களுக்கு திறக்கப்படும் போது அதன் கசிவு நீர் அனைத்தும் அந்தந்த பகுதிகளில் உள்ள ஏரி, குளம், குட்டைகளுக்கு செல்லும் வகையில் கசிவு நீர் பாதைகள் உள்ளன. இதே போல ஏரி, குளங்கள் நிரம்பினால் உபரி நீரானது காவிரி, பவானி, நொய்யல் ஆறுகளுக்கு செல்லும் வகையில் நீர் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 17 பெரிய ஏரிகள் உள்ளன. சிறு ஏரிகள், குளங்கள். தடுப்பணைகள் என 100க்கும் மேற்பட்டவை உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இதில் குறிப்பாக வரட்டுப்பள்ளம் அணை, குண்டேரிப்பள்ளம் அணை ஆகியவை நிரம்பி விட்டது. இந்தாண்டு மழைப்பொழிவு அதிகமாக உள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அதில் அந்தியூர். அம்மாபேட்டை, பவானி, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. மேலும் எண்ணமங்கலம் ஏரி. அந்தியூர் ஏரி, கெட்டி சமுத்திரம் ஏரி, பெரிய ஏரி , வேம்பத்தி ஏரி, பிரம்மதேசம் ஏரி, ஆப்பக்கூடல் ஏரி, தண்ணீர் பந்தல் ஏரி, கரும்பாறைபள்ளம் ஏரி, ஓடத்துறை ஏரி ஆகியவை நிரம்பிவிட்டது.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள மொத்த ஏரி, குளங்களில் 90 சதவீதம் நிரம்பிவிட்டது. கசிவு நீர் வசதி இல்லாத மேட்டுப்பாங்கான சென்னம்பட்டி ஏரி, முரளி ஏரி பகுதிகளில் உள்ள ஒரு சில ஏரி, குளங்கள் மட்டுமே நிரம்பாமல் உள்ளது. ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக உபரிநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகிறது. இதை தடுக்க நீர் வழித்தட ஆக்கிரமிப்பு களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீர்நிலை பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.