திருடிய நகைகளை வைக்காவிட்டால் சூலாயுதத்தில் கோழி.. பேனரால் பரபரப்பு
ஈரோடு அருகே திருடிய நகைகளை வைக்காவிட்டால் சூலாயுதத்தில் கோழி குத்தி பரிகாரம் செய்யப்படும் என பேனர் வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், கடத்தூர் கோபி அடுத்த வெள்ளாங்கோவிலை சேர்ந்தவர் ராமசாமி. இவர் கடந்த 15ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சாவியை மாடிப்படி அருகே உள்ள மறைவான இடத்தில் வைத்துவிட்டு வெளியூர் சென்றிருந்தார். மறுநாள் அவர் வீடுதிரும்பியபோது வீட்டின் சாவி வாசலில் கிடந்துள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, சாவியை எடுத்துக்கொண்டு வீட்டை திறந்து பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ. 3 ஆயிரத்தை யாரோ திருடி சென்றது தெரிந்தது. இதுகுறித்து சிறுவலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் நகை, பணத்தை திருடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் ராமசாமி குடும்பத்தினர் வீட்டின் முன்பு ஒரு பேனர் வைத்துள்ளனர். அதில், 'நகை, பணத்தை திருடியவர்கள் யாராக இருந்தாலும் வெள்ளாங்கோவிலில் உள்ள மாகாளியம்மன் கோவில் முன்பு வைத்துவிடவேண்டும். இல்லை என்றால் நாளை மாகாளியம்மன் கோவிலின் முன் உள்ள சூலாயுதத்தில் கோழி குத்தி பரிகாரம் செய்யப்படும். அவ்வாறு கோழி குத்திவிட்டால் நகையை திருடியவர்கள் குடும்பம் கடும் பாதிப்புக்கு உள்ளாகும்'. இவ்வாறு அந்த பேனரில் எழுதியிருந்தது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.