அந்தியூரில் முதல் முறையாக யானைகள் நடமாட்டத்தை தடுக்க தொங்கும் சூரிய மின்வேலி
அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் விளைநிலங்களில் நுழையும் யானைகளை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் முதல்முறையாக ‘தொங்கும் சூரிய மின்வேலி’ அமைக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி விளைநிலங்களில் நுழையும் யானைகளை தடுக்கும் வகையில், மாவட்டத்தில் முதல்முறையாக ‘தொங்கும் சூரிய மின்வேலி’ அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனத்துறை பகுதியில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் கிணத்தடி, காக்காயனூர் ஆகிய 2 மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு அந்தியூர் வனத்துறையின் சார்பில், யானைகள் நுழைவதை தடுக்க 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு அகழி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், காக்காயனூர் கிராமத்திற்குள் நுழையும் இடத்தில் ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலும், கிணத்தடி கிராமத்தில் ரூ.3 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.7.71 லட்சம் மதிப்பீட்டில் சூரிய ஒளியின் மூலம் இயங்கக்கூடிய தொங்கும் மின் வேலிக்கதவு அமைக்கப்பட்டதோடு அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து அந்தியூர் வனச்சரகர் முருகேசன், வனவர் சக்திவேல் ஆகியோர் கூறும்போது, இதன் மூலம் இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் யானைகள் புகுந்து மனித உயிர்களை சேதப்படுத்துவது தடுக்கப்படுகிறது. மேலும், விவசாய நிலங்களை பாதுகாக்கவும் வனத்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு் உள்ளது என்றனர்.