கொடிவேரி அணையில் குவிந்த மக்கள் கூட்டம்
Erode news, Erode news today- கோபியை அடுத்துள்ள கொடிவேரி அணையில், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
HIGHLIGHTS
Erode news, Erode news today- கோடை விடுமுறை காரணமாக கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனா்.
கோபி அருகே, கடத்தூரை அடுத்துள்ள கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் உள்ள பாறைகளில் இருந்து தண்ணீர் கொட்டும் போது பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். அதனால் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகே உள்ள சேலம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வந்து குளித்து மகிழ்வது வழக்கம். ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும்.
இந்நிலையில் மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால், நேற்று கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவியில் கொட்டும் தண்ணீரில் ஆனந்தமாய் குளித்துவிட்டு, அங்கு விற்கப்படும் மீன் வறுவல்களை வாங்கி சுவைத்தனர். சுற்றுலா பயணிகள் நேற்று அதிகளவில் வந்திருந்ததால் கோபி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
கொடிவேரி அணைக்கட்டு பகுதியில், சுட்டெரிக்கும் வெயிலுக்கு குளிர்ச்சியாக, மணிக்கணக்கில் மக்கள் குளித்து மகிழ்கின்றனர். மேலும் சுடச்சுட பொறி்த்த மீன், மீன் குழம்புடன் சாதம், மாங்காய், வெள்ளரிக்காய், இளநீர், ஐஸ்கிரீம், வேர்க்கடலை, சுண்டல், வேகவைத்த மக்காச்சோளம் உள்ளிட்டவையும், இங்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், இங்கு பரிசல் படகுகளும் உள்ளன. ஆற்றில் பரிசல் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ. 50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அணைக்கட்டு பகுதியை ஒட்டி, பூங்காவும் காணப்படுகிறது. இங்கு நுழைவு கட்டணம் ஐந்து ரூபாய் மட்டுமே என்பதால், நாள் முழுவதும் பொழுதை கழிக்க பலரும், கொடிவேரி அணைக்கட்டுக்கு வந்து விடுகின்றனர். தவிர, குளிக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக உடை மாற்றிக்கொள்ளும் வசதிகளும் உள்ளது.
இங்குள்ள முக்கிய பிரச்னைகள் என்னவென்றால், இங்கு அடிக்கடி திருட்டுகள் நடக்கிறது. குளிக்க செல்பவர்கள் தங்களது உடமைகளை பாதுகாப்பின்றி, யாருடைய கவனிப்பும் இன்றி வைத்துச் சென்றால் திரும்பி வரும்போது காணாமல் போய்விடும். குறிப்பாக, மொபைல் போன்கள், மணிபர்ஸ்கள் திருடு போய்கின்றன. மேலும், இங்கு ‘குடி’ மகன்கள் அதிகளவில் வருவதால், பெண்கள் அச்சப்படுகின்றனர். இதுதவிர, பஸ்சில் கொடிவேரி அணைக்கட்டுக்கு வர விரும்புவோர், கொடிவேரி அணை பிரிவில் இறங்கி, இரண்டு கி.மீ., தூரம் வரை நடந்துதான், அணைக்கட்டுக்கு வர வேண்டும். தனியார் வாகனங்களில் சென்றால், ரூ. 40 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, இங்கு வருவோரை அதிருப்தியடைய வைக்கிறது. அதனால், அணைக்கட்டு பகுதிக்கும், பிரதான ரோட்டுக்கும் சிறப்பு வாகனங்களை இயக்க வேண்டும் என, அங்கு வரும் பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.