விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் கோபியில் அரசு பஸ் ஜப்தி
விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் கோபியில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வாலிபாளையத்தை சேர்ந்தவர் தங்கராசு. (வயது 38). இவர் கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி, திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி ரோட்டில், மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதற்காக ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு சத்தியமங்கலம் சார்பு நீதிமன்றத்தில் தங்கராசு வழக்கு தொடர்ந்தார். அதன்பின்னர், இந்த வழக்கு கோபி 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் 2012-ம் ஆண்டு தங்கராசுக்கு 68 ஆயிரத்து 662 ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டார். ஆனால் அரசு போக்குவரத்து கழகம் தங்கராசுக்கு நஷ்ட ஈட்டு தொகையை வழங்கவில்லை.
இதைத்தொடர்ந்து, தங்கராராசு 2019-ம் ஆண்டு தீர்ப்பு நிறைவேற்று மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகநாதன் கடந்த 21-ந் தேதி அரசு போக்குவரத்து கழக பஸ் ஒன்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நேற்று கோபி பஸ்நிலையத்தில் மதுரை செல்வதற்காக நின்றிருந்த அரசு பஸ் ஒன்றை, கோர்ட்டு தரப்பில் ஜப்தி செய்யப்பட்டது. இதனால் பஸ் நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது..