ஈரோட்டில் ரூ.47.64 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டல்
ஈரோட்டில் ரூ.47.64 கோடி மதிப்பீட்டிலான பணிகளை அமைச்சர் முத்துசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், பவானியில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.36.28 கோடி மதிப்பீட்டில் பவானி நகருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி மற்றும் ஈரோடு மாநகராட்சி சார்பில் ரூ.11.36 கோடி மதிப்பீட்டில் 4 குளங்கள் மறுசீரமைக்கும் பணியினை ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா ஆகியோர் முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வளர்ச்சி பெறும் வகையில் சுமார் 85 திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். அத்திட்டங்களில் பெருமளவு திட்டங்களுக்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளும் விரைவில் துவங்கப்பட உள்ளது. அந்த வகையிலே பவானி நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இன்று (23.12.2022) நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ஈரோடு மாவட்டம், பவானி நகருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணியின் இரண்டாம் கட்டம் ரூ.36.28 கோடி மதிப்பீட்டில் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
பவானி புறவழிச்சாவையானது தேசிய நெடுஞ்சாலையான தொப்பூர்-மேட்டூர் பவானி ஈரோடு சாவை (தே.நெ.எண் 54411) கிமீ. 77/2 ஊராட்சிகோட்டையில் ஆரம்பித்து அதே சாலையில் கிமீ.82/6 சூரியம்பாளையத்தில் (NH 544 - சேலம் கொச்சின் சாலையில்) முடிவடையும் வகையில் மொத்தம் 8.189 கி.மீ நீளத்திற்கு அமைக்க நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 29.03.2022 அன்று அரசானை வழங்கப்பட்டது. இப்புறவழிச்சாலையானது மாநில நெடுஞ்சாலைகளான பவானி- அந்தியூர்- செல்லம்பாளையம் சாலை மற்றும் சத்தி- அத்தாணி- பவானி சாலை, மாவட்ட முக்கிய சாலையான பவானி - கவுந்தப்பாடி சாலை மற்றும் மாவட்ட இதர சாலையான பெருந்தலையூர் - கானிங்கராயன்பாளையம் சாலை ஆகிய சாலைகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
இப்பணியை விரைவாக செயல்படுத்திட ஏதுவாக இரண்டு கட்டங்களாக பிரித்து கிமீ 0/0 முதல் 4/582வரையிலான (கட்டம்- 1) பணிக்கு ரூ.49.51 கோடிக்கும், கிமீ 4/582 முதல் கி.மீ 8/189 வரையிலான (கட்டம் - 2) பணிக்கு ரூ.36.28 கோடிக்கும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு மதிப்பீடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டப்பணி பணி விரைவில் துவங்கப்படும் நிலையில் உள்ளது. இப்பணி முடிவடையும் நிலையில் பவானி நகரில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்து பொதுமக்கள் பெரிதும் பயனடைவர் என தெரிவித்தார்.
மேலும், ஈரோடு மாநகராட்சி சார்பில் 4 இடங்களில் குளங்கள் சீரமைக்கும் பணி துவங்கி வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், சமத்துவபுரம் பகுதியில் உள்ள குளத்தில் கரையை பலப்படுத்துதல் பணி மற்றும் மழைநீர் சேகரிப்பு வசதி செய்தல் பணி ரூ.188.00 இலட்சம் மதிப்பீட்டிலும், கருவில்பாறைவலசு பகுதியில் உள்ள குளத்தில் கிழக்குபுறம் மற்றும் மேற்கு கரையை பலப்படுத்துதல் மற்றும் மழைநீர் சேகரிப்பு வசதி செய்தல் பணி ரூ.790.30 இடைசம் மதிப்பீட்டிலும், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ், வார்டு எண் - 5 கங்காபுரம் குளத்தினை மறுசீரமைப்பு பணி ரூ.64.00 இலட்சம் மதிப்பீட்டிலும், எல்லப்பாளையம் குளத்தினை மறுசீரமைப்பு பணி ரூ.94.00 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.11.36 கோடி மதிப்பீட்டில் குளங்கள் சீரமைக்கும் பணி துவங்கி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். முன்னதாக, அமைச்சர் முத்துசாமி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியின் போது, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சிவராஜ், உதவி பொறியாளர்கள் மோகன்ராஜ், காயத்ரி, ஈரோடு வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரகாஷ், மண்டல குழு தலைவர்கள் பழனிச்சாமி (1 மண்டலம்), சசிக்குமார் (3 மண்டலம்), அறங்காவலர் குழுத்தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் காயத்ரி இளங்கோ, பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.