கவுந்தப்பாடி: அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு
கவுந்தப்பாடி அருகே உள்ள செம்பூத்தாம்பாளையத்தில் தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி உயிரிழந்தார்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள செம்பூத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம். விவசாயியான சுப்பிரமணியம் தனக்கு சொந்தமான அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கரும்பு பயிரிட்டு உள்ளார்.இந்நிலையில் நேற்று இரவு கவுந்தப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
இதனால் இன்று கரும்பு பயிர்கள் சேதமடைந்து உள்ளதா என்பதை பார்ப்பதற்காக சுப்பிரமணியம் கரும்பு பயிரிடப்பட்டு இருந்த தோட்டத்திற்கு சென்றுள்ளார்.அப்போது நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு அறுந்து கீழே விழுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் சுப்பிரமணியம் மிதித்து விடவே, அதில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணியம் பரிதாபமாக உயிரிழந்தார்.
கரும்பு தோட்டத்திற்கு சென்ற சுப்பிரமணியம் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராத நிலையில், அவரது மனைவி சுந்தரி கரும்பு தோட்டத்திற்குள் சென்று பார்த்த போது, சுப்பிரமணியம் மின்சாரம் தாக்கி உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து சுந்தரி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கவுந்தப்பாடி போலீசார் சுப்பிரமணியத்தின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மினசாரம் தாக்கி பலியான சுப்பிரமணியத்திற்கு தரணிதரன் என்ற மகன் உள்ளார்.