கோபி அருகே பெண்ணிடம் தாலிக்கொடியை பறிக்க முயன்ற மர்ம நபர்களால் பரபரப்பு
கோபிசெட்டிபாளையம் அருகே பெண்ணிடம் தாலிக்கொடியை பறிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் கோதண்டராமன். இவரது மனைவி தேன்மொழி (வயது 47). கோதண்டராமன் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் இல்லாத போது தேன்மொழி கடையை கவனித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை அளவில் 9.30 மணி இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் மளிகை கடைக்கு வந்தனர். அப்போது கடையில் தேன்மொழி மட்டும் இருந்தார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் தேன்மொழியிடம் தண்ணீர் கேட்டுள்ளனர்.
அவர் தண்ணீர் எடுக்க திரும்பிய போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து. நபர் ஒருவர் திடீரென தேன்மொழி கழுத்தில் இருந்த தாலிக்கொடியை பறிக்க முயன்றார். சுதாரித்துக் கொண்ட தேன்மொழி தாலிக்கொடியை கட்டியாக பிடித்துக்கொண்டு திருடன் திருடன் என கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.இதைகண்ட மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். அப்போது தேன்மொழி கடைக்குள் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கோபி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.