/* */

ஈரோடு மாவட்டத்திற்கு 13 ஆயிரத்து 400 கோவிஷில்டு தடுப்பூசி இன்று வருகை

ஈரோடு மாவட்டத்திற்கு  13 ஆயிரத்து 400 கோவிஷில்டு தடுப்பூசி இன்று வருகை
X

இந்தியாவில் கொரோனா தாக்கம் பல்வேறு மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கொரோனா பரவல்லை கட்டுப்படுத்த முதற்கட்டமாக கோவேக்சின், கோவிஷில்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தன. முதலில் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன.

அதன்பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 முதல் 59 வயது உள்ளவர்களுக்கும், பின்னர் 18 வயது முதல் 45 வயது உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கோவேக்சின், கோவிஷில்டு இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

முதலில் தடுப்பூசி பற்றிய அச்சத்தால் பொது மக்கள் பெரும்பாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் கட்டவில்லை. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 100 -க்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதேபோல் தனியார் ஆஸ்பத்திரியிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன.

தற்போது கொரோனா 2-ம் அலையால் பாதிப்பு அதிகரித்து உயிரிழப்பும் ஏற்பட்டு வருவதால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. இதனால் தடுப்பூசி போட மக்கள் தடுப்பூசி போடும் மையங்களில் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் திடீரென தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டது.

அரசு ஆஸ்பத்திரி ஆரம்ப சுகாதார மையங்களில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகர் பகுதியில் 10 ஆரம்ப சுகாதார மையங்களில் தினமும் 100 பேருக்கு டோக்கன் அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 42 ஆயிரத்து 250 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 45 வயதுக்கு மேற்பட்ட 1லட்சத்து 95 ஆயிரத்து 580 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதைப்போல் 18 வயது முதல் 44 வயது உட்பட்ட 46 ஆயிரத்து 670 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தடுப்பூசிகள் தட்டுப்பாடு காரணமாக கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் தடுப்பூசிகள் போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு இன்று 13 ஆயிரத்து 400 கோவிஷில்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. இந்தத் தடுப்பூசிகள் அந்தந்த தடுப்பூசி போடும் மையங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு நாளையிலிருந்து தடுப்பு ஊசிகள் போடப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். இது போக மேலும் 2000 தடுப்பூசிகள் வந்துள்ளன. அவை ஈரோடு, மொடக்குறிச்சி கொடுமுடி, பெருந்துறை. சென்னிமலை, பவானி, அந்தியூர் கோபி ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் முன்கள பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த 2000 தடுப்பூசிகள் போடுவதற்காக வந்துள்ளன. இந்த எட்டு ஊராட்சி பகுதிகளிலும் இன்று முன்கள பணியாளர்கள் ,மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது

Updated On: 12 Jun 2021 11:41 AM GMT

Related News