ஈரோடு: அந்தியூர் பெரிய ஏரி சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.50 லட்சம்
அந்தியூர் பெரிய ஏரியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் பணிகள் ரூ. 50 லட்சம் ரூபாயில் மேற்கொள்ளப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பெரிய ஏரியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் பணிகள் ரூ. 50 லட்சம் ரூபாயில் மேற்கொள்ளப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. சட்டசபையில், நேற்று சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் விவாதத்துக்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதில், ஈரோடு மாவட்டம், அந்தியூர் பெரிய ஏரிக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் படகில் பயணித்த வண்ணம் இயற்கை அழகினை ரசிக்க, இனிமையான அனுபவங்களை வழங்கும் வகையில் இங்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளுடன் படகு இல்லம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்படும் என அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
இது அந்தியூர் பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் அந்தியூர் பெரிய ஏரி படகு இல்லம் மற்றும் பிற வசதிகளுடன் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும் என உத்தரவிட்ட அமைச்சர் ராமச்சந்திரனை அந்தியூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம் சந்தித்து நன்றி தெரிவித்தார்.