ஈரோடு: ரூ.17,823.83 கோடியில் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியீடு
நபார்டு வங்கி சார்பில் 2023-24ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டார்.
HIGHLIGHTS
நபார்டு வங்கி சார்பில் 2023-24ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டார்.
ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கியாளர்கள் கூட்டத்தில் கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு வங்கி சார்பில் ஈரோடு மாவட்டத்திற்கான 2023-24 ஆம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியிட்டார். இந்த திட்ட அறிக்கையின்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி கிளைகளின் மூலம் 2023-24 ஆம் ஆண்டில், வளம் சார்ந்த கடன் வழங்குவதற்கான இலக்கு ரூபாய் 17823.83 கோடிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு நடப்பு 2022-23 ஆம் ஆண்டு இலக்கை விட 16.80 சதவீதம் அதிகமாகும்.
மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி இந்த திட்ட அறிக்கையை வெளியிட்டு கூறுகையில், விவசாயத்தில் நீண்ட கால கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை இத்திட்டம் விளக்குவதாக குறிப்பிட்டார். இது போன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி, விவசாயத்தை ஒரு லாபகரமான வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும் என்றும், உணவு மற்றும் வேளாண் பதப்படுத்துதல். துறைக்கு கடன் வழங்குவதில் கவனம் செலுத்தி பாரதப் பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் (MFME) திட்டத்தை திறம்பட பயன்படுத்த வங்கியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில், ஈரோடு மாவட்டத்தில் வரும் 2023-24 ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துணைத்தொழில்களுக்கான கடன் ரூபாய் 9055.32 கோடிகளாகவும், நுண் சிறு மற்றும் குறு (MSME) தொழில்களுக்கான கடன் ரூபாய் 5800.54 கோடிகளாகவும், ஏற்றுமதிக்கு ரூபாய் 356.25 கோடிகளாகவும், கல்வி கடனுக்காக ரூபாய் 469.68 கோடிகளாகவும் வீடு கட்டுதல் மற்றும் மீள்சக்தி (Renewable Energy) ஆகியவற்றுக்கு முறையே ரூபாய் 1011 கோடி மற்றும் 75.93 கோடிகளாகவும் நிர்ணயிக்கப்பட்டு கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது போன்ற கடன் வசதிகள், விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்ற உதவும். வேளாண்மையில் எந்திரமயமாக்கல், சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவும். இதுபோன்ற முதலீடுகளுக்கு வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அசோக்குமார், தமிழ்செல்வன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்தகுமார், மாவட்ட தாட்கோ மேலாளர் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.