ஈரோடு: விடிய விடிய மழை; சத்தி - அத்தாணி சாலையில் போக்குவரத்து துண்டிப்பு
Erode news, Erode news today-ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
HIGHLIGHTS
Erode news, Erode news today - சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் டிசம்பர் 1 ம் தேதி வரை மிதமான மழை பெய்யகூடும் என்று தெரிவித்து இருந்தது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 'கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 27 ம் தேதி முதல் டிச.1 ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்' என்று தெரிவித்து இருந்தது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில், நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது. மாநகர் பகுதியில் மதிய நேரத்தில் லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து, வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்த படியே இருந்தன. மாவட்டத்தில் நள்ளிரவு நேரத்தில் பெய்ய ஆரம்பித்த மழையானது, விடிய விடிய வெளுத்து வாங்கியது. இரவு முழுவதும் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. அதிகபட்சமாக கொடிவேரி பகுதியில் 123 மி.மீ மழை பெய்தது. இதனால் தற்போது கொடிவேரி தடுப்பணையில் இருந்து 1,492 கன அடி வெள்ள நீர் வெளியேறுவதால், அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் பெய்த மழையின் காரணமாக, அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், நள்ளிரவு பெய்த மழையால் சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் கொண்டையம்பாளையம் அருகே உள்ள ஜாக்கன்காட்டுபள்ளத்தில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மழைநீர் செல்வதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும், அம்மாபேட்டை பகுதியில் பெய்த மழையின் காரணமாக சிங்கம்பேட்டை கேட்டில் சாலையோர புளிய மரத்தின் கிளை உடைந்து ரோட்டில் சாய்ந்தது. இதனால், எப்போது வேண்டுமானாலும் மரம் முழுமையாக வாகனங்கள் மீது விழுந்து விட வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று காலை வரை பெய்த மழையின் அளவு விவரம் (மில்லி மீட்டரில்) பின்வருமாறு
கோபி - 13.22 மி.மீ ,
தாளவாடி - 2.00 மி.மீ ,
சத்தியமங்கலம் - 63.00 மி.மீ ,
பவானிசாகர் - 43.20 மி.மீ ,
நம்பியூர் - 6.00 மி.மீ ,
சென்னிமலை - 2.00 மி.மீ ,
மொடக்குறிச்சி - 1.10 மி.மீ ,
அம்மாபேட்டை - 27.00 மி.மீ ,
கொடிவேரி - 123.00 மி.மீ ,
குண்டேரிப்பள்ளம் - 79.60 மி.மீ ,
மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 358.12 மி.மீ
மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 21.06 மி.மீ ஆகும்.
மேலும், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று (28.11.2022) ஈரோடு மாவட்டத்திற்கு அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.