ரேஷன் கடை ஊழியர் தீக்குளிக்க முயற்சி; ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு
Erode news, Erode news today-ஈரோடு மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலக வளாகத்தில், ரேஷன் கடை ஊழியர் தீக்குளிக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
Erode news, Erode news today- ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 35). இவர் முனிசிபல் காலனியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிசெய்கிறார். இவருடைய உறவுக்கார பெண் ஒருவர், பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். நில பிரச்சினை தொடர்பாக ஜெயக்குமாருக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் அந்த பெண் புகார் அளித்தார்.
இதையடுத்து ஜெயக்குமாரை தொடர்பு கொண்ட போலீசார், விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு தெரிவித்தனர். ஆனால் அவர் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லவில்லை. இதனால், 'விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்றால், நடவடிக்கை எடுக்கப்படும்,' என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்நிலையில், மனவேதனை அடைந்த ஜெயக்குமார், ஈரோடு மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு கொடுப்பதற்காக நேற்று காலை வந்தார். வளாகப் பகுதியில் இருந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை திடீரென எடுத்து, மண்ணெண்ணெயை தனது உடலில் தனக்குத்தாவே ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், உடனடியாக வந்து அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரது உடலில், தீப்பற்ற வைக்க முயற்சிக்காமல், அவரை முற்றிலுமாக தடுத்தனர். அவர் மீது அங்கிருந்த குடங்களில் இருந்த தண்ணீரை எடுத்துக் கொட்டினர்.
இதையடுத்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, நிலப்பிரச்னை தொடர்பாக, பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவுக்கார பெண் தன் மீது பொய்யான புகாரை கொடுத்திருப்பதாகவும், அந்த புகாரில் உண்மை இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், தன் மீது பொய்யான புகாரை அளித்திருப்பதால், போலீசார் தன்னை விசாரணைக்கு அழைப்பதாகவும், இதுகுறித்த வேதனையால்தான், தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் போலீசாரிடம் தெரவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஜெயக்குமார், ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். தீக்குளிக்க முயன்ற ஜெயக்குமார் மாலை அணிந்து விரதம் கடைபிடித்து வருவதாகவும், அவர் பிறந்தநாள் தினத்திலேயே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலக வளாகத்தில், ரேஷன் கடை ஊழியர் ஜெயக்குமார் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ் ஸ்டேஷன்கள், போலீஸ் துறை சார்ந்த உயரதிகாரிகளின் அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலக பகுதிகளில், இதுபோல், பாதிக்கப்பட்ட பொதுமக்களில் ஒரு சிலர், இதுபோன்ற தீக்குளிப்பு முயற்சிகளில் ஈடுபடுவதால், அடிக்கடி பரபரப்பும் பதட்டமும் ஏற்படுகிறது. இதை முற்றிலுமாக தடுக்க, இப்பகுதிகளுக்கு வரும் பொதுமக்கள், சோதனை செய்யப்பட்ட பின்னரே, அலுவலக பகுதிகளுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.