ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்
Erode news, Erode news today-ஈரோட்டில் மொபட்டில் 1,750 கிலோ ரேசன் அரிசி கடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
மொபட்டில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
Erode news, Erode news today- ஈரோடு குடிமைப்பொருள் குற்றபுலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உத்தரவின்பேரில், போலீசார் நேற்று இரவு சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக மொபட்டில் 2 அரிசி மூட்டைகளுடன் வந்த நபரை, சந்தேகத்தின்பேரில் போலீசார் பின் தொடர்ந்து சென்றனர். சூரம்பட்டிவலசு மாரியம்மன் கோவில் முன்பு மொபட்டினை நிறுத்தி, மூட்டையை கீழே இறக்கினார். இதையடுத்து போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் ஈரோடு பழையகள்ளிவலசு பகுதியை சேர்ந்த மணிமாறன் (48) என்பதும், அவர் 33 மூட்டைகளில் ரேஷன் அரிசியை கடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மணிமாறனை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 1,750 கிலோ ரேஷன் அரிசியும். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
கரூர் மாவட்டம், அத்தனூர் செங்காடூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் முருகேசன் (28), கட்டிடத் தொழிலாளி, முருகேசன் கடந்த மாதம் 16ம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் உள்ள லேட் கிரிட் கம்பெனியில், சுவர் இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, முருகேசன் மீது சுவர் சாய்ந்து விழுந்ததில் வலது கால், கழுத்து போன்ற இடங்களில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முருகேசனை சக தொழிலாளர்கள் மீட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
மது விற்ற 5 பேர் கைது
ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க மதுவிலக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் நேற்று தீவிர ரோந்து மேற்கொண்டனர். இதில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக, சிங்கம்பேட்டை பகுதியில் நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த தனாச்சிவரதன் (63), மூணாஞ்சாவடியில் செல்லவேல் (63), பூனாச்சியில் செந்தில்குமார் (43), கடம்பூர் பசுவனபுரத்தில் ரமேஷ் (25), காஞ்சிக்கோவிலில் பூபதி என்ற அர்ஜுனன் (42) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து. 33 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் முதியவரிடம் பணம் திருட்டு
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் திருச்சி பஸ் ரேக்கில், ஈரோட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் பஸ்சுக்காக நேற்று முன்தினம் இரவு காத்திருந்தார். அப்போது, அவரது அருகே நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், முதியவரின் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.6,800 ரொக்கத்தை, பாக்கெட்டில் பிளேடு போட்டு திருடி சென்றுள்ளார். இதை சில நிமிடம் கழித்து உணர்ந்த முதியவர், ஈரோடு பஸ் ஸ்டாண்டில் உள்ள டவுன் அவுட் போஸ்ட் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் முதியவரிடம் விசாரணை நடத்தி, பஸ் ஸ்டாண்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, பிக்பாக்கெட் அடித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.