அந்தியூர் அருகே உலா வந்த ஒற்றை காட்டு யானையால் பீதி
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே தண்ணீரை தேடி தேவர்மலை சாலையில் ஒற்றை காட்டு யானை உலா வந்ததால், வாகன ஓட்டிகள் பீதிக்குள்ளாகினர்.
HIGHLIGHTS
Erode news, Erode news today- அந்தியூர் அருகே தண்ணீரைத் தேடி, தேவர்மலை சாலையில் ஒற்றை காட்டு யானை உலா வந்தது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக, கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பர்கூர் வனப்பகுதிகளுக்குள் குட்டைகள் வறண்டு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமப்பகுதிக்குள் புகுந்து விடுகிறது. இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை தாமரைக்கரையில் இருந்து தேவர்மலை சாலையில் சுற்றித்திரிந்தது.
மேலும் அந்த யானை சாலையோரங்களில் வளர்ந்து காணப்படும் மூங்கில் மரக்கிளைகளை முறித்து தின்றது. அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், யானை நிற்பதை பார்த்ததும் தங்களுடைய வாகனங்களை சற்று தொலைவில் நிறுத்திக் கொண்டனர். பின்னர் அவர்கள் அந்த யானையை தங்களுடைய செல்போனில் படம் பிடித்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தற்போது வனப்பகுதி வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது. இதனால் வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறி, சாலையோரங்களில் சுற்றித்திரிகிறது. குறிப்பாக. யானைகள் சாலையோரங்களில் அடிக்கடி உலா வருகின்றன. அப்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும், என அறிவுறுத்தியுள்ளனர்.