ஈரோடு இடைத்தேர்தல்; வேட்புமனு தாக்கல் செய்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
Erode news, Erode news today- ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
HIGHLIGHTS
Erode news, Erode news today- ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிட கடந்த மாதம் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 20 பேர் நேற்று வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், பிரதான கட்சிகளான காங்கிரஸ், அதிமுக, அமமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதனைத்தொடர்ந்து, இன்று நண்பகலில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது காங்கிரஸ் மூத்த நிர்வாகி செல்வபெருந்தகை, எம். பி.க்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
அதன்பின் நிருபர்களிடம் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது, ஈரோடு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். ஈரோடு நகரத்தில் உள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முயற்சி செய்வேன். மேலும், அண்ணாமலை குறித்து, நான் பதில் சொல்ல விரும்பவில்லை, என்றார்.
திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக திமுகவினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி, அர.சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, வி.செந்தில்பாலாஜி, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் ஈரோட்டில் முகாமிட்டு தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். திமுகவினர் வீடுவீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குச் சேகரித்து வருகின்றனர்.