பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் உண்டியல் திறப்பு; ரூ.27.34 லட்சம் வசூல்
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.27.34 லட்சம் காணிக்கை இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
HIGHLIGHTS
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலுக்கும், பவானி, காவிரி மற்றும் கண்ணுக்கு தெரியாத சரஸ்வதி நதியும் ஒன்று கூடும் கூடுதுறைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இக்கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்த சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மன், ஆதிகேசவப் பெருமாள் சன்னிதிகள் மற்றும் பழனியாண்டவர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில் என 21 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, கோவில் வளாகத்தில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படும். அந்த வகையில், நேற்று இந்து சமய அறநிலையத் துறை ஈரோடு மாவட்ட உதவி ஆணையர் அன்னக்கொடி, பவானி சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் சாமிநாதன், பண்ணாரி மாரியம்மன் கோயில் கண்காணிப்பாளர் பாலசுந்தரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை குமாரபாளையம் தனியார் கல்லூரி மாணவிகள் மூலம் எண்ணப்பட்டன.
இதில், சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல்களில் ரூ.25 லட்சத்து 41 ஆயிரமும், பழனியாண்டவர் கோவிலில் ரூ.70 ஆயிரத்து நானூறும், காசி விஸ்வநாதர் கோவிலில் ரூ.8 ஆயிரத்து அறுநூறும், காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. மேலும், பசு பராமரிப்புக்கு ரூ.96 ஆயிரமும், யானை பராமரிப்புக்கு ரூ.17 ஆயிரமும், காணிக்கையும், தங்கமாக 35 கிராம், வெள்ளியாக 200 கிராமும் செலுத்தப்பட்டிருந்தது. கடந்த 3 மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்ட 21 உண்டியல்களில் மொத்தம் ரூ.27,33,842-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.