ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் இன்று குண்டம் திருவிழா
பெரிய மாரியம்மன் கோவிலில் நள்ளிரவிலும் பெண்கள் வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனிதநீர், பால் ஊற்றி வருகிறாா்கள்
HIGHLIGHTS
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பால் குடம் எடுத்து பெண்கள் ஊர்வலமாக வந்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) குண்டம் விழா நடக்கிறது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா வையொட்டி பால் குடம் எடுத்து பெண்கள் ஊர்வலமாக வந்தனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) குண்டம் விழா நடக்கிறது. திரு விழா ஈரோடு மாநகர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலிலும், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய வகையறா கோவில்களிலும் திருவிழா கடந்த மாதம் 21- ஆம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 25-ஆம் தேதி இரவு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய 3 கோவில்களிலும் கம்பங்கள் நடப்பட்டன. அதைத் தொடர்ந்து தினமும் கம்பத்துக்கு பெண்கள் புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் நள்ளிரவிலும் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனித நீர், பால் ஊற்றி வருகிறாா்கள். இதனால் எந்த நேரமும் கோயில் திரு விழா களைகட்டி காணப்பட்டது. இந்தநிலையில் நேற்றும் பல்வேறு இடங்களில் இருந்து தீர்த்தக் குடம், பால் குடம் எடுத்து கொண்டு பெண்கள் கோவிலுக்கு வந்தனர். ஈரோடு கோட்டை பகுதியை சேர்ந்த பெண்கள் திரளாக பால் குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சென்றார்கள்.
அங்கு அவர்கள் கம்பத்துக்கு பால் ஊற்றி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை தரிசனம் செய்தனர் இதேபோல் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் செயல்படும் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் நேற்று தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு வந்தார்கள். காவிரிக் கரைக்கு சென்ற அவர்கள் பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து கொண்டு பெரிய மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இதையொட்டி காய்கறி மார்க்கெட்டுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது குண்டம் விழா இன்று (செவ்வாய்க் கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடக்கிறது.
இதையொட்டி நேற்று இரவில் குண்டம் பற்ற வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. குண்டம் இறங்குவதற்கு பக்தர்கள் தயாராக வரிசையில் காத்திருந்தனர். இரவு 8 மணிக்கு மா விளக்கு பூஜையும், கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு பொங்கல் விழாவும், சின்ன மாரியம்மன் கோவில் தேரோட்டமும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்கும் விழாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் 8-ந் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது.