கனி மார்க்கெட்டில் தற்காலிக ஜவுளி கடைகள் அமைக்கும் பணி தொடக்கம்
நீதிமன்ற உத்தரவின்படி ஈரோடு கனி மார்க்கெட்டில் தற்காலிக ஜவுளி கடைகள் அமைக்கும் பணி தொடங்கியது.
HIGHLIGHTS
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனி மார்க்கெட் ஜவுளி கடைகள் செயல்பட்டன. இங்கு 200-க்கும் மேற்பட்ட நிரந்தர கடைகளும், 730 வாரச்சந்தை கடைகளும் இருந்தன. இந்த வளாகத்தில் ரூ.54 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டு உள்ளது. இங்கு கட்டப்பட்டு உள்ள கடைகளை, ஏற்கனவே அங்கு கடை வைத்து இருப்பவர்களுக்கு ஒதுக்குவதாக கூறி வழங்கப்படவில்லை.
அதற்கு பதிலாக மாத வாடகையாக ரூ. 31,500ம், வைப்பு தொகையாக ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையும் செலுத்த வேண்டும் என கூறியதால் யாரும் கடைக்கு செல்வில்லை. இதனால் வணிக வளாகம் தற்போது மூடிக்கிடக்கிறது.
இதற்கிடையில் கனி மார்க்கெட்டில் செயல்பட்டுவந்த தற்காலிக கடைகளை நீதிமன்ற உத்தரவுப்படி, மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. தீபாவளி வரை கடை நடத்திக்கொள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்தும், மாநகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை.
இந்த நிலையில் வருகிற டிசம்பர் மாதம் 31 வரை பழைய இடத்தில் செயல்பட சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாபாரிகள் உத்தரவு பெற்றனர். அதை மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுத்த விடாமல் தடுத்த நிலையில், மீண்டும் அனுமதி பெற்று, தற்காலிக கடைகள் அமைக்கும் பணி தொடங்கியது.
இதுபற்றி, கனி மார்க்கெட் வாரச்சந்தை வியாபாரிகள் சங்க தலைவர் கூறும்போது, வருகிற டிசம்பர் மாதம் 31 தேதி வரை பழைய இடத்தில் கடை அமைத்து ஜவுளி வியாபாரம் செய்து கொள்ள நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளோம். பழைய இடத்தில் 80 கடைகள் அமைக்க ரூ.5 லட்சம் வரை செலவாகும். இருந்தாலும், தீபாவளி விற்பனையை நம்பி, இங்கு செயல்பட உள்ளோம். கடைகள் அமைக்கும் பணி முடிந்ததும் மீண்டும் ஜவுளி விற்பனை தொடங்கும்என்று தெரிவித்தார்