மின் கட்டணத்தை குறைக்க விசைத்தறியாளர்கள் வலியுறுத்தல்
மின் கட்டண குறைப்பது தொடர்பாக நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் கோரிக்கை
HIGHLIGHTS
விசைத்தறிக்கான மின் கட்டண குறைப்பது தொடர்பாக நடப்பு கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்
இது தொடர்பாக தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது, தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் விசைத்தறி தொழிலை காக்கும் பொருட்டு இரண்டு மாதத்திற்கு 500 யூனிட் மின்சார மானியம் வழங்கினார்.
பின்னர் 750 யூனிட்டாக உயர்த்தி தற்போது வரை நடைமுறையில் உள்ளது. 2021ம் ஆண்டு திமுக வெளியிட்ட சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் 1000 யூனிட் இலவச மின்சாரம் விசைத்தறி கூடங்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆட்சி பொறுப்பேற்று ஒன்றை வருடங்களாகின்ற நிலையில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் 1000 யூனிட் இலவசம் என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என்று விசைத்தறியாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்கள்.
இதே போல புதிய மின் கட்டண உயர்வால் விசைத்தறியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விசைத்தறிக்கான மின் கட்டணம் குறைப்பு அறிவிப்பை தமிழ்நாடு முதல்வர் வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வு ரத்து குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்புடன் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் உள்ளனர்.தமிழக அரசு, மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம் இணைந்து மின் கட்டண உயர்வு அறிவிப்பை அண்மையில் வெளியிட்டன.
திடீர் மின்கட்டண உயர்வு, தொழில் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசு அறிவித்துள்ள 30 சதவீத மின் கட்டண உயர்வு என்பது, விசைத்தறியில் அனைத்து சிலாப்புகளுக்கும் 30 சதவீத மின் கட்டண உயர்வாகும். இது விசைத்தறியாளர்களுக்கு பேரதிர்ச்சியாகவும், பேரிடியாகவும் உள்ளது. ஒரு யூனிட்டுக்கு ரூ. 1.40 பைசா உயர்வு என்பது, ஒவ்வொரு விசைத்தறியாளருக்கும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. வருவாயின் பெரும் பகுதி மின்கட்டணத்துக்கே செல்லும் என்றும், தொழிலை விட்டு செல்வதை தவிர வேறு வழி இல்லை எனவும் விசைத்தறி உரிமையாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
கோவை, மதுரை, சென்னையில் நடந்த கருத்து கேட்பு கூட்டங்களின் போதும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். ஓரிரு நாளில் மின் கட்டணம் உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கின்றனர். ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'மின் கட்டண உயர்வு அறிவிப்பு தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்திலும், அமைச்சர்களை சந்தித்தும் முறையிட்டுள்ளோம். அமைச்சர்கள் நம்பிக்கையுடன் பதில் தெரிவித்துள்ளனர்.மற்ற தொழில்களை போன்று இல்லாமல், விசைத்தறிக்கு இந்த கட்டண உயர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கிறோம் என்றனர்.