பொங்கல்: சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களால் நிரம்பி வழிந்த பஸ் ரயில் நிலையம்
ஏற்கெனவே இயக்கப்படும் பஸ்களை விட கூடுதலாக 50 சிறப்பு பஸ்கள் நேற்று இரவு முதல் இயக்கப்பட்டு வருகிறது.
HIGHLIGHTS
பொங்கல் பண்டிகையை கொண்டாட தொடர்பு விடுமுறை வர உள்ளதால் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை போகி பொங்கல், பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் எனத் தொடர்ந்து நாளை முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதை ஒட்டி சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் கொண்டாடும் வகையில் ரெயில்கள், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகைக்காக ஏற்கனவே ரயில்களில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. இதே போல் பஸ்களிலும் முன்பதிவு இருக்கை நிரம்பிவிட்டன.
இந்நிலையில் இன்று ஈரோடு ரயில் நிலையத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்ய மக்கள் அதிகம் ஆர்வம் கட்டி வருகின்றனர். இன்று அதிகாலை முதலே ஈரோடு ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க மக்கள் போட்டி போட்டு அடித்துப்பிடித்து ஏறினர். ஏராளமான மக்கள் குடும்பத்துடன் நேற்று இரவு முதல் ரயில் நிலையங்களில் குவியத் தொடங்கினர்.
இதனால் ஈரோடு வழியாக பிற மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இதேபோல் ஈரோடு பஸ் நிலையங்களிலும் நேற்று இரவு முதல் கூட்டம் அதிகமாக இருந்தது. பொங்கல் பண்டிகையை மக்கள் சிரமம் இன்றி கொண்டாடும் வகையில் ஏற்கெனவே இயக்கப்படும் பஸ்களை விட கூடுதலாக 50 சிறப்பு பஸ்கள் நேற்று இரவு முதல் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் அந்த பஸ்களிலும் இடம் பிடிக்க பயணிகள் போட்டா போட்டி போட்டனர். இதனால் பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இதே போல் இன்று இரவும் ஈரோடு ரயில் நிலையம், பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். கூட்டத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள் பயணிகளிடம் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதற்காக ஈரோடு பஸ் நிலையத்தில் போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.