ஈரோடு கிழக்கு தொகுதியில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்படவில்லை: செந்தில் பாலாஜி
ஜனவரி 5- ல் மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர்
HIGHLIGHTS
ஈரோடு ஈரோடு கிழக்கு தொகுதியில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்படவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
போலி வாக்காளர்கள் ஈரோடு வீரப்பன்சத்திரம் காவிரி ரோட்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது: தமிழக முதல்-அமைச்சரின் ஆதரவுடன் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகத்தான வெற்றி பெறுவார். ஈரோடு கிழக்கு தொகுதியில் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளதாக எதிர் அணியில் இருப்பவர்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 936 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் இருக்கிறார்கள். சுமார் 60 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். எனவே போலி வாக்காளர்கள் சேர்க்கப்படவில்லை. கடந்த தேர்தலில் எவ்வளவு வாக்குகள் இருந்தது, இந்த தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசம் உள்ளது என்பது தெரியாமல் பேசுகிறார்கள் எதிர்க்கட்சியினர்.
நாங்கள் அடைய உள்ள வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாமல் இப்போதே அவர்களது தோல்வியை ஒப்புக் கொள்வதற்காக இந்த கருத்துகளை முன் வைக்கிறார்கள். எங்களது வேட்பாளா் வேட்புமனு தாக்கலின்போது கூட தேர்தல் விதிமுறையின்படி 5 பேருடன் சென்று தான் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த தேர்தல் என்பது நேர்மையாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடந்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். இந்த பேட்டியின் போது வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடனிருந்தார்.
மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல்களுடன் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் பிப்ரவரி 27- ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வேட்புமனு தாக்கல் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 7 வரை. வேட்பு மனு பரிசீலனை பிப்ரவரி 8. வேட்பு மனுவை திரும்பப் பெற இறுதி நாள் பிப்ரவரி 10. வாக்குப்பதிவு பிப்ரவரி 27. வாக்கு எண்ணிக்கை மார்ச்-2ஆகும். இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா மாரடைப்பால் இறந்ததை அடுத்து இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் இம்முறையும் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். மரணமடைந்த எம்எல்ஏ திருமகன் ஈவேரா முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் ஆவார்