/* */

தமிழகத்தில் முதன்முறையாக ஈரோடு அரசு பள்ளி சமையல் கூடத்திற்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ்

தமிழகத்தில் முதன்முறையாக கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி சமையல் கூடத்திற்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் முதன்முறையாக ஈரோடு அரசு பள்ளி   சமையல் கூடத்திற்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ்
X

கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி. 

தமிழகத்தில் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகள் உள்கட்டமைப்பு வசதியுடன் இருந்து வருகிறது. இதற்காக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஈரோட்டில் ஒரு தலைமையாசிரியர் முயற்சியால் முதல் முறையாக சமையல் கூடத்திற்கு ஐ.எஸ்.ஓ தர சான்றிதழ் கிடைத்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:

ஈரோடு் கருங்கல்பாளையத்தில் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 1061 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 2017 ம் ஆண்டு தலைமை ஆசிரியராக மாலா என்பவர் பொறுப்பேற்றார். இவர்தான் இந்த பள்ளியின் சமையல் கூடத்திற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் கிடைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். 300 பேருக்கு மதிய உணவு சமைக்கும் சமையல் கூடம் சுகாதாரமற்ற முறையில், பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்துவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனை தொடர்ந்து சமையல் கூடம் முழுவதும் டைல்ஸ் கொண்டு செப்பனிட்டும், வர்ணம் அடித்தும் அழகுப்படுத்தினர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை சமையல் கூடத்திலிருந்து முற்றிலும் ஒழிக்கும் விதமாக பெற்றோர்களிடம் கல்விச்சீராக பெற்று சமையல் கூடத்திற்கு தேவையான எவர்சில்வர் மற்றும் மண்பாத்திரங்களை பெற்றார். மேலும் மாணவிகளுக்கு சுகாதார முறையில் சமைக்கும் பொருட்டு ஆர்.ஓ தண்ணீர் பொருத்தி, அந்த நீரில் மட்டுமே சமைக்க உத்தரவிட்டார்.

மேலும் காய்கறிகளை சமைப்பதற்கு முன்பு மஞ்சள் கொண்டு கழுவியும் , சமைக்கும் சமையலர் நகங்கள் வெட்டி இருக்க வேண்டும், வளையல் மற்றும் மோதிரங்கள் அணிந்து இருக்கக்கூடாது என்றும் முடி உணவில் விழாமல் இருக்க தலையில் தொப்பி அணிந்து மாணவிகளுக்கு சமையல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, அதை முறையாக சமையலர்கள் கடைப்பிடிக்கிறார்களா என்பவை அறிய ஆசிரியர் குழு ஒன்றை நியமித்தார் தலைமை ஆசிரியர்.

மேலும் பள்ளியிலேயே ஆர்கனிக் காய்கறி தோட்டம் அமைத்து அதில் விளையும் காய்கறிகளை வாரத்தில் ஒரு நாள் சமையலுக்கும் பயன்படுத்தி வந்தார். மாணவிகள் சாப்பிட பயன்படுத்தும் தட்டுகளை சூடுநீரில் சுத்தம் செய்து காய வைத்த பின்னரும், சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு சுடுதண்ணீர் மட்டுமே கொடுக்க உத்தரவிட்டார். மேலும் இவை அனைத்தும் முறையாக, தவறாமல் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை அறிய 2 சிசிடிவி கேமராவை சமையல் கூடத்தில் பொருத்தி தனது அறையிலிருந்து கண்காணித்து வருகிறார். மாணவிகளின் பெற்றோர்களும் எந்த நேரமும் சமையல் அறையை சென்று பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆய்வுக்கு வந்த சத்துணவு ஒருங்கிணைப்பாளர்கள் கொடுத்த உற்சாகத்தில் சமையல் கூடத்திற்கு என ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தனர். இதன் அடிப்படையில் பள்ளியின் சமையல் கூடத்தில் 4 முறை ஆய்வு செய்த ஐ.எஸ்.ஓ தரச்சான்று அதிகாரிகள் சுகாதார முறையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை என்பதாலும் , பணியாளர்களின் நேர்த்தியாலும் , உணவின் சுவையாலும், மாணவிகளின் சுகாதாரத்தில் அக்கறை செலுத்துவதாலும் கடந்த மாதம் ஐ.எஸ்.ஓ சான்றிதழ் வழங்கினர்.

தமிழகத்தில் முதன்முறையாக அரசுப்பள்ளி சமையல் கூடத்திற்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் கிடைக்க ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் தலைமையாசிரியர் மாலா நன்றியை தெரிவித்துக் கொண்டார். சமையல் கூடம் மட்டுமின்றி பள்ளியில் ஒவ்வொரு கட்டிடங்களுக்கும் தமிழகத்தின் வீர மங்கைகள் பெயரும், பள்ளியின் நேரத்தில் ஏற்படும் மன அழுத்ததை போக்க வகுப்பு அறைகளின் முன் தூரி கட்டி விளையாடவும் , மாணவிகளுக்கு இரும்புச்சத்து கிடைக்க முருங்கை சூப் வழங்குதல் , டிஜிட்டல் நூலகம் அமைத்தல் என இந்த மாநகராட்சி பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராகவே உள்ளது.

Updated On: 26 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்
  2. லைஃப்ஸ்டைல்
    'பாரபட்ஷம்' நியாயத்தை கொல்லும் கூர்வாள்..!
  3. மதுரை
    மதுரை வாக்குச்சாவடியில் காவி முண்டாசு கட்டிய தேர்தல் அலுவலர்!...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈருயிர் ஓருயிராக உருவெடுத்த கணவன்-மனைவி உறவு..!
  5. லைஃப்ஸ்டைல்
    ரமழான் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் இதயத்தை நிரப்பும் பண்டிகை..!
  6. சங்கரன்கோவில்
    சங்கரன்கோவில் அருகே தேர்தல் புறக்கணிப்பு! 1000 ஓட்டுகளில் 1௦ மட்டுமே...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘என்றாவது ஒரு நாள், நான் இல்லாமல் போவேன்’ - மனிதர்களுக்கு மரணம்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் இரவு 7 மணி நிலவரப்படி 71.42 சதவீதம் வாக்குப்பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    எமை ஈன்றெடுத்த தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து..!
  10. சூலூர்
    104 வயதில் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய முதியவர்