ஈரோட்டில் ரயில், பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
Erode news, Erode news today- பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து, ஈரோட்டில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
HIGHLIGHTS
Erode news, Erode news today - பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் -பஸ் ஸ்டாண்டுகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மாணவ -மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஈரோட்டில் தங்கி படிக்கும் மாணவ -மாணவிகள் சொந்த ஊர்களுக்குச் சென்ற வண்ணம் உள்ளனர்.
மேலும், ஈரோட்டை சேர்ந்த மாணவ -மாணவிகளும் உறவினர் வீடுகளுக்கு செல்கின்றனர்.இதன் காரணமாக ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாண்டுகளில் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு சென்ற ரயில்கள் மற்றும் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ரயிலில் முன்பதிவு அல்லாத பெட்டிகளில் அளவுக்கு அதிகமாக பயணிகள் பயணம் செய்தனர்.
கோடை காலம் துவங்கிய நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும், வெளிமாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்குச் செல்ல அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதுபோல், தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு செல்லவும் திட்டமிட்டு, பஸ்கள் மற்றும் ரயில்களில் செல்கின்றனர். ஓரளவு வசதியானவர்கள் வாடகை கார்களில் செல்கின்றனர். வசதியானவர்கள், தங்களது சொந்த வாகனங்களில் செல்கின்றனர். இன்னும் ஒரு தரப்பினர், சுற்றுலா வாகனங்கள் மூலம் திருப்பதி, ஊட்டி, கொடைக்கானல், பழனி, மதுரை, திருச்சி, ஏற்காடு, கன்யாகுமரி, திருச்செந்தூர் என செல்கின்றனர். ஆனால், பெரும்பாலான மக்கள் நடுத்தர மக்கள் பஸ்கள் மற்றும் ரயில்களில் மட்டுமே பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
கோடைகால விடுமுறை காலத்தை யொட்டி, மாவட்டந்தோறும் அரசு போக்குவரத்து நிர்வாகங்கள், கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றாலும், ஈரோட்டில் பஸ்களில், ரயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.