7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இன்ஜினியரிங் அட்மிஷன்: முதல்வருக்கு நன்றி தெரிவித்த மாணவி
காசிபாளையம் அரசு பள்ளியில் பயின்ற சலவை தொழிலாளியின் மகளுக்கு தனியார் பொறியியல் கல்லூரியில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்துள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு முத்தம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்-கண்மணி தம்பதியினர். சலவை தொழிலாளியான இவர்களின் ஒரே மகள் சினேகா. இவர் ஈரோடு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியாக இருந்த போது ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலும் அதன் பின் பள்ளி தற்போது மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் அப்பள்ளியில் தமிழ் வழியில் பிளஸ் 2 வரை பயின்றார்.
தனது தந்தை ஆறுமுகம், தாய் கண்மணி இருவரும் சலவை தொழிலாளி என்பதால் மேற்கொண்டு உயர்கல்வி பயில முடியாத நிலை ஏற்பட்டு படிப்பை கைவிடும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அரசு பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அனைத்து உயர் கல்வியிலும் வழங்க உத்திரவிட்டதையடுத்து, மாணவி சினேகாவிற்கு பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் இடம் கிடைத்துள்ளது
இந்த ஒதுக்கீட்டில் இடம் கிடைப்பவர்களுக்கு கட்டணம் ஏதும் இன்றி கல்லூரி தங்கும் விடுதி கட்டணம் உள்ளிட்டவற்றை தமிழக அரசே ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண சலவை தொழிலாளியின் மகளின் உயர்கல்வி கனவை நனவாக்கிய முதல்வருக்கும், தனது படிப்பிற்கு பல வகையில் உதவி புரிந்த தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துச்சாமிக்கும் மாணவி சிநேகாவும் அவரது பெற்றோர்களும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொண்டனர்
பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்த மாணவி சினேகாவிற்கு காசிபாளையம் தொடக்கபள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி மற்றும் ஆசிரியைகள் தொடக்க பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் குமாரசாமி, மேல்நிலைபள்ளி பெற்றோர் அசிரியர் சங்க தலைவர் அண்ணமார் வெங்கடாச்சலம், செயலாளர் தங்கமுத்து ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.