10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் அலுவலகத்தில் மனு
ஈரோட்டில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் பல்வேறு கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் சார்பில் மொத்தம் 260 மனுக்கள் அளிக்கப்பட்டது
HIGHLIGHTS
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.இந்த கூட்டத்துக்கு மாவட்டவருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு:
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு இயக்கத்தின் உறுப்பினர் சித்தோடு பகுதியை சேர்ந்த மணிகண்ணன் என்பவர் 10 ரூபாய் நாணயம் மற்றும் 1 ரூபாய், 2 ரூபாய் நோட்டுகளுடன் மனு கொடுக்க ஆட்சியர் அலுவலகம் வந்தார். பின்னர் அவர் அளித்த கோரிக்கை மனு விவரம்:
ரிசர்வ் வங்கி மூலமாக அரசு பத்து ரூபாய் நாணயத்தை மக்கள் புழக்கத்துக்காக வெளியிட்டுள்ளது. அதை அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் நடத்துனர்கள் வாங்க மறுத்து வருகின்றனர். இதோ போல, சிறு வியாபாரிகள் முதல் மொத்த வியாபாரிகள், தேநீர் கடைகள உள்ள எந்த வியாபாரிகளும் இந்த பத்து ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை. இதே போல ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நோட்டுகளையும் வாங்க மறுக்கின்றனர். இகு குறித்து விசாரித்து முறையான அறிவிப்பை வெளியிட்டு இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அளிக்கப்பட்டிருந்த மனுவில், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட வாரச்சந்தையில் 50- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மாட்டிறைச்சி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் 22-ந்தேதி நகராட்சி நிர்வாகம் எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி கடைகளை இடித்துவிட்டது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் கடைகள் நடத்த நகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்
பவானி பசுவேஸ்வரர் வீதி மற்றும் ஜங்கமர் வீதியைச்சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் காவிரி ஆற்றங்கரையோரம் குடியிருந்து வருகிறோம். இந்த சூழ்நிலையில் ஒருமாதகாலத்திற்குள் வசிப்பிடத்தை காலி செய்து, புறநகர் பகுதியில் ஒதுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்ல வேண்டும் என அதிகாரிகள் கூறு கின்றனர். அங்கு சென்றால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே நாங்கள் தொடர்ந்து அங்கு குடியிருக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இதே போல் மொத்தம் 260 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அதை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்